நெல்லை விவசாயிகளே, அமெரிக்க படைப்புழு தாக்குதலில் மாக்காசோள பயிரை காப்பது எப்படி?
அமெரிக்கன் படைபுழு தாக்குதலில் இருந்து மக்காச் சோள பயிர்களை காப்பது குறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,
''நெல்லை மாவட்டத்தில் மானுர் வட்டத்தில் 1,000 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அமெரிக்க படைப்புழு நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்கும். இதை தடுக்க, நிலத்தை ஆழமாக உழ வேண்டும். இதனால், மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்பட்டு, சூரிய ஒளி மற்றும் பறவைகளால் படைப்புழு அழிக்கப்படும். அதோடு கூட்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி உருவாவதும் தவிர்க்கப்படும். கடைசி உழவு மேற்கொள்ளும்போது, மண்ணில் ஒரு ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடுவதன் வாயிலாக, கூட்டுப்புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு அந்துப்பூச்சி வெளிவருவதை தடுக்க முடியும். ஒரு கிலோ மக்காசோள விதைக்கு 10 கிராம் "பவேரியா பேசியோனா" என்றநுண்ணுயிர் பூச்சிக்கொல்லிஅல்லது 10 கிராம் "தயோமீதாக்சம்" பயன்படுத்தி|விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
பயிர்கள் நெருக்கமாக இருந்தால் பயிர்களுக்கு இடையே படைப்புழு வேகமாக பரவும். மக்காசோளத்திற்கு வரிசைக்கு வரிசை 60 செ.மீ., பயிருக்கு பயிர் 20 செ.மீ. இடைவெளி, மானாவாரி மக்காசோளத்திற்கு வரிசைக்கு வரிசை 45 செ.மீ., பயிருக்கு பயிர் 20 செ.மீ. இடைவெளி, 10 பயிர் வரிசைக்கு ஒரு வரிசை 75 செ.மீ. இடைவெளி விடவேண்டும். இதனால் பயிர் பாதுகாப்பு எளிதாகும்.
விதைத்த 15-ஆம் நாள் 10 லிட்டர் நீரில் 20மி.லி. அளவில் வேப்ப எண்ணெய் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் அந்துப்பூச்சிகள் முட்டையிடுவதை தடுக்க முடியும். தாய் அந்துப்பூச்சிகள் உள்ளதா என்பதை அறிய விதைத்த 3-5 நாடகளில் ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாய் அந்துப்பூச்சி தென்பட்டால் அவற்றை கவர்ந்து அழிக்க ஹெக்டேருக்கு 50 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும்.மக்காசோளம் விதைக்கும்போது தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிர்களை வரப்பிலும், பயறு வகை பயிர்களை ஊடு பயிராக விதைத்தால், இயற்கை ஒட்டுண்ணிகளும், இரை விழுங்கிகளும் அதிக எண்ணிக்கையில் பெருகி அமெரிக்கன் படைப்புழுவை தாக்கி அழிக்கும். இளம் பயிர்களில் காணப்படும் அந்துப்பூச்சிகளின் முட்டை குவியல்கள் மற்றும் இளம் புழு கூட்டங்களை கைகளால் சேர்த்து அழிக்க வேண்டும்.படைப்புழு அதிகம் தாக்கும் மக்காசோள பயிர்களை மீண்டும், மீண்டும் சாகுபடி செய்வதை தடுக்க பயிர்கழற்சி முறைகளை பின்பற்ற வேண்டும். ''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.