கொளுத்த தொடங்கியது கோடை வெயில் தண்ணீரே அருமருந்து... கோடையின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?

How to protect from sunlight

Mar 9, 2019, 10:44 AM IST

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், நம் மரபு சார்ந்த எளிய முறைகளை கையாண்டு அதன் பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

திருத்தணியில் 105 டிகிரி, எட்டு நகரங்களில் வெயில் சதம் என்றெல்லாம் தற்போது நாளிதழ் தலைப்புகளை பார்க்க முடிகிறது. கத்தரி வெயிலுக்கு முன்பே நம்மை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.

 

கோடையில் அதிக வியர்வை, உடல் துர்நாற்றம், அரிப்பு போன்ற பிரச்சனைகளும், உஷ்ணத்தால் உடல் பாதிப்புகள் ஆரம்பித்துவிடுகின்றன. இதில் இருந்து, பாரம்பரிய எளிய வழிகளில் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

தண்ணீரே அருமருந்து

வெயில் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பிரச்சனை வியர்க்குரு. அதிகபட்ச வெயிலால் உடல் சூடாகும் போது அதை குளிர்விக்க வியர்வை அதிகம் சுரக்கிறது. வியர்வை சுரப்பிகளில் அழுக்கு சேரும் போது, வியர்க்குருவாக வெளிப்படுகிறது.

இதை கட்டுப்படுத்த, தண்ணீருக்கு பிரச்சனையில்லை என்றால், தினமும் இருவேளை குளிக்கலாம். வியர்க்குருவுக்கென உள்ள பவுடரை உடம்பில் பூசிக்கொள்ளலாம். இறுக்கமான ஆடைகளை அணியாமல் மெல்லிய கைத்தறி, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

 

வெயிலில் அலையும் பலருக்கும் ஏற்படும் மற்றொரு பிரச்சனை, சிறுநீர்க் கடுப்பு. போதியளவு தண்ணீர் குடிக்காததே இதற்கு முக்கிய காரணம். தண்ணீர் குடிப்பது குறைந்தால், சிறுநீரின் அளவு குறைந்து, அதன் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர் பாதையில் படிகமாக தேங்குகிறது. இதன் விளைவாகவே நீர்க்கடுப்பு உண்டாகிறது. நிறையத்தண்ணீர் குடிப்பதே இதற்கான சிறந்த மருந்து.

வெயிலில் சிலருக்கு மயக்கம் உண்டாகிறது. இதை தான் ‘வெப்ப மயக்கம்' என்கிறோம். வெயில் சூட்டால் தோலில் இருக்கும் ரத்தக்குழாய்கள் விரிவடைந்து, இடுப்புக்கு கீழ் ரத்தம் தேங்கும்; இதயத்துக்கு வரும் ரத்தம் குறையும். மூளைக்கும் ரத்தம் குறைவாக செல்வதால், மயக்கம் உண்டாகிறது. அதிக வெயில் நேரத்தில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கோடை முடியும் வரை, பகல் 12 மணி முதல், மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பதே நல்லது.

வேனல் கட்டி, கோடையில் பலரையும் பாடாய் படுத்துகிறது. தோலின் வெளியேறம் உப்பு, யூரியா போன்றவை வியர்வையால் சரியாக வெளியேற முடியாமல் தங்கிவிடும். அங்கு பாக்டீரியா தொற்றிக்கொ ள்வதால் புண்ணாகி, வீக்கம் உண்டாகிறது. ஆண்டிபயாடிக் மருந்துகள், வெளிப்பூச்சு களிம்புகளை, உரிய மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

கோடை காலத்தில் உடலில் முக்கிய தேவை, தண்ணீர் தான். எனவே, தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. காபி, தேநீர், குடிப்பதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், கொழுப்பு, காரம் அதிகமுள்ள உணவுகளை தள்ளி வைக்க வேண்டும்.

மோர், இளநீர், எலுமிச்சை பழரசம், பதநீரை பருகலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலியன உடல் வெப்பத்தை போக்கி, நீரிழப்பால் ஏற்படும் பாதிப்புகளை குறைகின்றன.

வெள்ளரி, தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, ஆரஞ்சு, திராட்சை , நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், பழரசங்களை அடிக்கடி உட்கொள்ளலாம். இவற்றில் உள்ள பொட்டாசியம், கோடை வெயிலால் உடல் இழக்கும் சக்திகளை ஈடுகட்டும்.

தயிர்சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், கோஸ், வாழைத்தண்டு, வெண்டைக்காய், புடலை, வெங்காயப் பச்சடி, தக்காளிக் கூட்டு போன்றவை கோடைக்கு உகந்த உணவு வகைகள்.

கோடைக்கு பருத்தி ஆடைகளே சிறந்தது. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். அடர் நிறங்கள் வெப்பத்தை ஈர்க்கும் என்பதால், அதை தவிர்க்கலாம்.

You'r reading கொளுத்த தொடங்கியது கோடை வெயில் தண்ணீரே அருமருந்து... கோடையின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை