மாதவிடாய் கோளாறு... மார்பக புற்றுநோய்... மலச்சிக்கல் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு

benefits of fig fruit

by SAM ASIR, Sep 18, 2020, 21:44 PM IST

பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் (கொட்டை வகை) உணவு பொருள்களும், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களும்தான் உடலுக்கு நன்மை செய்கின்றன என்று நினைத்துக்கொள்வோம். ஆனால், அத்திப்பழத்திலும் பல நன்மைகள் உள்ளன.

எடை குறைப்பு

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். அதிக நார்ச்சத்து கொண்ட உணவு பொருள்கள் உடல் எடையை பராமரிப்பதில் உதவி செய்கின்றன என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நார்ச்சத்து அதிகமுள்ள உணவு பொருள்கள் திருப்தியாக உணரச் செய்வதால் வேண்டாத பண்டங்களை சாப்பிடமாட்டோம். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு நன்மை செய்வதோடு, புற்றுநோய் மற்றும் இன்சுலின் குறைவு காரணமான இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு வராமலும் தடுக்கிறது.

அமெரிக்க மருத்துவ உணவியல் ஆய்விதழ், நார்ச்சத்து அதிகமான உணவு முறை அதிகப்படியான உடல் எடையை குறைக்கிறது என்ற ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக ஆற்றல் (கலோரி) இருக்கும். ஆகவே, அவற்றை குறைவான அளவே சாப்பிட வேண்டும். பழங்காலத்தில் உடல் வலிமைக்காக உலர் அத்திப்பழங்களையே சாப்பிட்டனர். ஆகவே, அவற்றை குறைவான அளவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

இரத்தக் கொதிப்பு

அத்திப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உண்டு. இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க பொட்டாசியம் அவசியம். சோடியத்தினால் ஏற்படும் விளைவுகளை பொட்டாசியம் சமநிலைப்படுத்துகிறது. அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளையே நாம் தற்போது சாப்பிட்டு வருகிறோம். அவற்றில் சோடியம் அதிகம். ஆகவே, சோடியத்திற்கு எதிராக செயல்படக்கூடிய பொட்டாசியத்தை உணவில் சேர்த்துக்கொள்வது கட்டாய தேவையாகும். பொட்டாசியம் உடலில் சேரும்போது இரத்த ஓட்டம் சீராகும்; செரிமான கோளாறுகள் அகலும். ஜப்பானிலுள்ள ஷிகா பல்கலைக்கழகம், நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பொட்டாசியம் அதிகமுள்ள உணவு பொருளை சாப்பிட்டால் அவர்கள் இருதயமும் சிறுநீரகங்களும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

குழந்தைப் பேறு

பழங்காலத்தில் கிரேக்கத்தில் அத்திப்பழம் புனிதமாக கருதப்பட்டது. இந்தியாவில் பழங்காலத்தில் அத்திப்பழமும் பாலும் சேர்த்து உண்பது வழக்கமாக இருந்தது. துத்தநாகம் (ஸிங்க்), மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை அத்திப்பழத்தில் உள்ளது. இது குழந்தைப்பேற்றுக்கான சக்தியை அளிக்கிறது. மாதவிடாய் கால உபாதைகளை சமாளிக்க இளம்பெண்களுக்கு அத்திப்பழம் சாப்பிட கொடுப்பது வழக்கம். உலர்ந்த அத்திப்பழத்தில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளும் நார்ச்சத்தும் இருப்பதால் அவை ஹார்மோன் கோளாறுகளிலிருந்தும், மாதவிடாய் நின்றதற்கு பின் வரக்கூடிய மார்பக புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கின்றன.

எலும்புக்கு வலிமை

உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) அதிகம். ஒருநாளைக்கு ஒரு மனிதருக்கு 1000 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து அவசியம். கால்சியம் நம் உடலில் உற்பத்தியாவதில்லை. ஆகவே, உணவு மூலம் மட்டுமே சுண்ணாம்புச் சத்து உடலில் சேர முடியும். அதிக சுண்ணாம்புச் சத்து கொண்ட பாலை பருகினால்கூட தேவையான அளவு கிடைக்காத நிலை உள்ளது. ஆகவே, அத்திப்பழத்தை சாப்பிடுவது எலும்பு வலிமை பெற உதவும்.

நார்ச்சத்து அதிகமுள்ளதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துதல், மலச்சிக்கலை போக்குதல், இதயத்தை ஆரோக்கியமாக காத்தல் ஆகிய நன்மைகளை அத்திப்பழம் நமக்கு அளிக்கிறது.

You'r reading மாதவிடாய் கோளாறு... மார்பக புற்றுநோய்... மலச்சிக்கல் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை