இந்திய அணி தோல்வி... சாமானிய ரசிகனின் பார்வையில்....

Mar 7, 2018, 12:33 PM IST
இந்தியா- இலங்கை- வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் சுதந்திர கிண்ணம் எனப்படும் நிதாகரஸ் டிராபி, நேற்று தொடங்கியது. ஒருநாள் விட்டு ஒருநாள் நடைபெறும் இந்த 20-20 போட்டி தொடரில், மூன்று அணிகளும் மற்ற இரு அணிகளுடன் இரண்டு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மார்ச் 18-ல் மோதும்.
முதல் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது, இலங்கை-இந்திய அணிகள் மோதின.
கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம் இந்திய அணிக்கு சொர்க்கபுரியாக திகழும் ஒரு மைதானம் ஆகும். அங்கு இதற்கு முன் ஆடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருந்தது. இந்திய ரசிகர்கள் அந்த நிலைமை மீண்டும் தொடரும் என நினைத்திருந்தார்கள், இந்திய அணியும் அவ்வாறே நினைத்துவிட்டார்கள் போலும், அதே மெத்தனப்போக்கு தோல்வி எண்ணிக்கையைத் தான் இரண்டாக உயர்த்தியுள்ளது.
டாஸ் வென்று இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, டோனி, பாண்டியா, பும்ரா, புவி போன்ற முக்கிய ஆட்டக்காரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரிஷாப் பான்ட், தாக்கூர்,  தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.+
தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா வழக்கம் போல் இந்த போட்டியிலும் ரன் ஏதும் அடிக்காமல் நடையை கட்டினார், சுரேஷ் ரெய்னாவும் வழக்கம் போல் வந்த வேகத்தில் திரும்ப, ரன் அடிப்பதை விட விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்வதே மணீஷ் பாண்டேவிற்கு பெரிய வேலையாக இருந்தது.
ஒவ்வொரு இந்திய அணியின் போட்டியின் முடிவை எழுதும்போதும், ஷிகர் தவானை பற்றியே பாராட்டி எழுதுவதாக எனக்கு தோன்றுகிறது.
அப்படி ஒரு பேர் சொல்லும்படியான சிறப்பான ஆட்டம். மட்டையில் பட்டு மேலே எழுந்ததெல்லாம் ஆறாக ஓடியது. இரண்டு சிக்ஸர்களை குருட்டாம்போக்கு சிக்ஸ் எனலாம், ஆனால் அணியின் எண்ணிக்கை 170+ வருவதற்கு தவான் மட்டுமே காரணம் என்றால் அது மிகையாகாது, 30 பந்துகளில் தனது 5-வது அரை சதத்தை பதிவு செய்தார்.
பின்னர் பாண்டே ஓரளவு கடைமுறைக்கு விளையாடி வெளியேற, எதிர்கால இந்தியாவிற்கு கிடைத்த சச்சின் டெண்டுல்கர் என பலராலும் எதிர்பார்க்கப்படும் ரிஷாப் பான்டின் ஆட்டம் ஏதோ வலைப்பயிற்சி செய்வது போல் இருந்தது.
ரன் போதாது என்பதால், சற்று கோவப்பட்டு அவசரப்பட்டு ஆடிய ஷிகர் தவான், தனது முதல் சதத்தை தவற விட்டார், சிறப்பாக விளையாடிய அவர் 49 பந்துகளுக்கு 6 சிக்ஸ், 6 பௌண்டரி உள்பட 90 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார், இந்த 90 ரன்களே இலங்கை மைதானத்தில் இந்திய வீரர் ஒருவரின் அதிகப்டச ரன்களாகும். மேலும் ஷிகர் தவானின் அதிகபட்மும் இதுதான். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே வெற்றிக்கான தக்கல் முன்பதிவை உறுதி செய்து கொண்டது அந்த அணி. தாக்கூர் வீசிய அந்த ஓவரில், நோ பால் உள்பட 5 பௌண்டரி, ஒரு சிக்ஸ் என மொத்தம் 27 ரன்களை குவித்தார் இலங்கை வீரர் குஷல் பெரேரா. ஒரே ஓவரில் அதிக ரன் கொடுத்த இந்தியர்கள்கள் வரிசையில் ஸ்டூவர்ட் பின்னிக்கு (32) பின்னால் தாக்கூர் (27) நேற்றைய போட்டியின் மூலம் இணைந்துள்ளார்.
அதன் பின் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் 50 ரன்களை கடந்தார் குஷல் பெரேரா. இந்த போட்டியில் 22 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததன் மூலம், அதிவேகமாக ஐம்பது ரன்கள் விளாசிய இலங்கை வீரர்கள் பட்டியலில், ஜெயவர்தனே (21), சங்ககரா (21) வுடன் இணைந்துள்ளார்.
மேலும் குஷல் பெரேரா 37 பந்துகளை சந்தித்து, 6 பௌண்டரி, 4 சிக்ஸருடன் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார், பின்னர் பொறுமையாக விளையாடி, இலங்கை அணி வெற்றி வாகை சூடியது. குஷல் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்திய அணிக்கு இது நல்ல ஸ்கோர் தான், இதனால் மட்டும் இந்தியா வென்றுவிடும் என முடிவு செய்து, டீவியை ஆஃப் செய்த இந்திய ரசிகர்களுக்கு, இன்று காலை கேள்விப்படும் தோல்வியின் செய்தி, திரிபுராவின் தேர்தல் முடிவைப்போல் நிச்சயம்  ஆச்சர்யத்தை தந்திருக்கும். தோல்வி குறித்து என்னிடம் கேட்டால், எனது பதில்... தாக்கூர் ஒரே ஓவரில் கொடுத்த 27 ரன்களை விட, உதிரம் சிந்தி வீச வேண்டிய கடைசி நேர பந்துகளுக்கு உதிரி ரன்கள் வழங்கியதும், ரிஸாப் பான்டின் கடைசி நேர தடுமாற்றமும், மணீஸ் பான்டேவின் ஒன்டே மேட்ச் ஆட்டமும் சேர்த்து, 200 தொடவேண்டிய அணியின் எண்ணிக்கையில் 30 ரன்கள் விழுங்கியதும் தான் தோல்விக்கு காரணம் என்பேன்.
ஆனா எனக்கு இந்த ஒன்னு தான் புரிய மாட்டிக்குது... தவான் மண்டைக்கு மேல போன பந்து எப்படி சிக்ஸ் போச்சி...!!! ஒரே குழப்பமா இருக்கே...!!!

You'r reading இந்திய அணி தோல்வி... சாமானிய ரசிகனின் பார்வையில்.... Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை