பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமானது.. டெல்லி மக்கள் அதிர்ச்சி..

For the first time, diesel costs more than petrol in Delhi.

by எஸ். எம். கணபதி, Jun 24, 2020, 12:50 PM IST

டெல்லியில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 108 டாலராக விற்றது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41 ஆக இருந்தது.
அதற்குப் பிறகு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டே வந்து, தற்போது பேரல் 40 டாலராக உள்ளது. இந்த விலைக்கேற்ப இந்தியாவில் விலையை நிர்ணயித்தால், பெட்ரோல் லிட்டர் ரூ.35க்கு விற்கப்பட வேண்டும். ஆனால், மோடி அரசு அந்த விலை சரிவுகளைக் கலால் வரியாக உயர்த்திக் கொண்டே வந்திருக்கிறது.

இதனால், உலக அளவில் பெட்ரோல், டீசலுக்கு வரி விதிப்பதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.கொரோனா ஊரடங்கின் போது 82 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதன் பின், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜூன் 7ம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ83.04க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.76.77க்கும் விற்கப்படுகிறது.

அதே சமயம், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.76க்கும், டீசல் ரூ.79.86க்கும் விற்கப்படுகிறது. எப்போதுமே பெட்ரோல் விலை, டீசல் விலையை விட நான்கைந்து ரூபாய் அதிகமாக இருக்கும். அதனால் தான், பெரும்பாலான மோட்டார் வாகனங்கள் டீசலில் இயக்கப்படுகின்றன. ஆனால், முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்துள்ளது. இது டெல்லி வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. குறிப்பாக, செலவைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதிக விலை கொடுத்து டீசல் வாகனங்களை வாங்கிய நடுத்தர மக்கள்தான் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

You'r reading பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமானது.. டெல்லி மக்கள் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை