பிரதமர் மோடியின் லடாக் எல்லைப் பகுதி விசிட் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது.
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலையில் விமானம் மூலம் லடாக்கிற்கு சென்றார். லடாக்கில் சுமார் 11 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் உள்ள நிமு பகுதிக்குப் பிரதமர் மோடி சென்றார். அவருடன் முப்படைத் தளபதி பிபின்ராவத், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே ஆகியோரும் சென்றனர். அங்குப் பிரதமர் மோடி, ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சீனாவின் அத்துமீறல்கள் குறித்தும், ராணுவத்தினரின் பதிலடி குறித்தும் அப்போது பிரதமர் கேட்டறிந்தார்.
இது குறித்து, பெய்ஜிங்கில் சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவ் லிஜியான் கூறுகையில், சீனா, இந்தியா இடையே பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தொடர்பில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருதரப்புமே எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்தார்.















