கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் ஷியாம் என்பவரின் மனைவி பரமஜெசிலட் (59). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி மாலை வீட்டில் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையன் பரமஜெசிலெட் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். செயினை பிடித்துக் கொண்டு அவர் அலறவே பக்கத்து அறையில் இருந்த அவரது மகள் ஓடி வந்துள்ளார். இருவரும் கொள்ளையணை பிடித்து தாக்கினர். இதனால், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து பரமஜெசிலெட் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, வெள்ளியாகுளம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் மகன் சிவா (24) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஏ.எஸ் அமீர்தீன் தீர்ப்பு வழங்கினார். அதில், சிவாவிற்கு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 3 வருடம் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதற்காக 3 வருட கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து, சிவாவை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.