
குளச்சல் பகுதியில் குட்டியானை வாகனத்தில் குளிர்பானம் மற்றும் குடிநீர் கேன்களுக்கிடையே பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட புகையிலை , குட்கா பொருட்களை நூதன முறையில் கடத்தி வந்து கடைகளுக்கு சப்ளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெட்டி கடைகளுக்கு குட்டியானை வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனையடுத்து குளச்சல் காவல் நிலைய ஆய்வாளர் இசக்கிதுரை தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை காலை குளச்சல் பீச் ஜங்சன் பகுதியில் வைத்து சந்தேகத்திற்கு இடமாக வந்த குட்டியானை வாகனத்தை மடக்கி பிடித்து டிரைவரையும் காவல் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர்
விசாரணையில் டிரைவர் கருங்கல் பகுதியை சேர்ந்த 41-வயதான அர்டின்தாஸ் என்பதும் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக இருந்துவர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்த நிலையில் வீட்டு தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க குறுக்கு வழியில் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். இதனால், தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை கடத்த தொடங்கியுதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அர்டின்தாஸை கைது செய்த குளச்சல் போலீசார் 85 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் மற்றும் குட்டியானை வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.