தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி: செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்கா... கானல் நீரா?

கடந்த 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க ஆட்சி காலத்தின் போது ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி தனது அறிக்கையில் படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலையினை போக்கிடும் வகையில் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்கிட வேண்டும் என வலியுறுத்தியது. இதன்படி தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் கொண்டுவரும் வகையில் நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு முயற்சித்தது.

தமிழ்நாட்டிலேயே ரப்பர் பயிரிடப்படும் ஒரே மாவட்டமான கன்னியாகுமரியில் செண்பகராமன்புதூரில் ரப்பரை ஆதாரமாகக் கொண்டு தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கென சுமார் 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இதனை மிகவும் எதிர்பார்த்தனர்.

ஆனால், இதுதொடர்பாக எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இந்த திட்டம் கிணற்றில் போடப்பட்ட கல் போல ஆனது. இதனால் தேர்தலின் போது, வேட்பாளர்கள் தாங்கள் வென்றால் ரப்பர் பூங்காவினை கொண்டு வருவோம் எனக் கூறி வாக்கு சேகரிப்பதும், வென்ற பின் அதனை மறந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் தேர்தல் தோறும் உயிர்பெறும் திட்டமாக, வாக்குறுதிக்கு பயன்படும் திட்டமாக ரப்பர் பூங்கா அறிவிப்பு பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப் பட்ட நிலங்கள் தற்போது தனியாருக்கு தாரைவார்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லாத நிலை இதன்மூலம் மாறும் என்று கருதியவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.

கடந்த பல வருடகாலமாக இத்திட்டத்தினை எதிர்நோக்கிய மக்களுக்கு இதன் உண்மை நிலையினை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.எனவே இதுபற்றிய விளக்கத்தினை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.