
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி) சார்பாக தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியினை அடுத்த ஆழ்கடல் பகுதியில் இதற்கென 3 இடங்களும் சென்னை அருகே ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி கன்னியாகுமரி அருகே முதல் இடத்தில் 9 ஆயிரத்து 514.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2வது இடத்தில் 9 ஆயிரத்து 844.72 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்ர 3வது இடத்தில் 7 ஆயிரத்து 795.45 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சென்னைக்கு அருகே ஆழ்கடலில் 5 ஆயிரத்து 330.49 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் என மொத்தம் 32 ஆயிரத்து 485.29 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல்பகுதியில் சுமார் 35 நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் "வாட்ஜ் பேங்க்" எனப்படும் மீன் உற்பத்தி படுகையாகும். இங்கு அரியவகை பாதுகாக்கப்பட்ட ஆவுளியா உள்ளிட்ட 25 வகை பாலூட்டிகள், டால்பின்கள், திமிங்கலம் உள்ளிட்டவை வாழும் இடமாகும்.இவை குறைந்த அதிர்வு ஒலியை எழுப்பி தங்களுக்குள் தகவல் பரிமாற்றம், வழிகளையும் கண்டறிகின்றன.எரிவாயு எடுக்கும் போது வெளியிடப்படும் ரசாயன கழிவுகள், அதிர்வுகளால் கடல்வாழ் உயிரினங்கள் இறந்துபோகும் நிலை உள்ளது.
இந்த திட்டத்துக்காக கடலின் ஆழத்தில் செலுத்தப்படும் குழாய்களால் பவளப்பாறைகள், மீன்களின் உணவான தாவரங்கள் அடியோடு அழிந்துபோகும். கடல்வாழ் உயிரினங்கள், மீன்பிடி பொருளாதாரமும், மீனவர்களின் வாழ்வாதாரமும், மக்களின் புரத உணவு தேவையும், இயற்கை வளமும், சுற்றுச்சூழலும் முற்றிலுமாய் சீர்குலைந்து போகும். எனவே, இத்திட்டத்தினை கைவிட வேண்டும் என ஆரல்வாய்மொழி சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.