
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூர் புளியமூடு பகுதியை சேர்ந்தவர் பிரைட் . இவர் அருவிக்கரை கிராமத்திலுள்ள பெருங்குளம் குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க வட்டாட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு, பாஸ் வழங்க கோரியுள்ளார். பெருங்குளம் செருப்பாலூர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வருவதால் பொது பணி துறை அலுவலகத்தில் சென்று முறையிட்டு உள்ளார். அங்கு அலுவலகத்தில் உதவியாளராக பணி புரியும் ஜஸ்டின் என்ற ரசல்ராஜ் தன்னை உதவி பொறியாளரை போல காண்பித்து கொண்டுள்ளார்.
மேலும், பாஸ் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரைட் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சால்வன்துரை தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை பிரைட்டிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் செருப்பாலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகே பதுங்கி இருந்தனர். பிரைட் பொதுப்பணித்துறை அலுவலக உதவியாளர் ஜஸ்டின் என்ற ரசல் ராஜிடம் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தபோது மறைந்து இருந்த டிஎஸ்பி சால்வன் துரை கையும் களவுமாக பிடித்தார். பின்னர், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.