தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'' சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக காங்கிரஸ் தொண்டர்களை கவலை அடைய வைத்துள்ளது. நல்ல வேளையாக அந்த சமயத்தில், அங்கு யாரும் இல்லை. இதனால், பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப .சிதம்பரத்தை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளதையே காட்டுகிறது.
இந்தியாவில் பொருளாதாரத்தை உயர்த்திய தலை சிறந்த தலைவர்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பங்கு மகத்தானது. அவர்கள் வழியில் இன்று இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில்
நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி இந்தியாவின் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தியின் நம்பிக்கையாக பாராளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக ஒலிக்கும் கார்த்தி ப சிதம்பரத்தின் செயல்பாடுகள் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.அனைத்து மக்கள் பிரச்சனைகளிலும் தைரியமாக கருத்துக்களை தெரிவிப்பதோடு, மட்டுமல்லாமல், களத்திலும் இறங்கி செயல்பட்டு வரும்
கார்த்தி ப சிதம்பரத்தின் கருத்துக்கள் பொது மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்பதால் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
காங்கிரஸின் வளர்ச்சியையும் கார்த்தி ப சிதம்பரத்தின் வளர்ச்சியையும் தடுக்கும் நோக்கில் மர்ம நபர்கள் செய்த இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியது.எனவே , கார்த்தி ப சிதம்பரத்துக்கு மத்திய அரசு உடனடியாக இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.'
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.










