மண் பயனுற வேண்டும் - நமது பாரம்பரியம் பகுதி - 3

நமது பாரம்பரியம் பகுதி - 3

by Isaivaani, Mar 2, 2018, 09:14 AM IST

“மண் பயனுற வேண்டும்” என்றார் பாரதி. ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே, மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என்று பாடினான் ஒரு கவிஞன். உண்மையில் உயிர் ஆரம்பமாவதும் மண்ணுக்குள்தான், யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களில், நிலம் மட்டும்தான் ஓர் உயிரை ஈன்றெடுக்கும் தாயாய் விளங்குகிறது. அதனால்தான் அவளை பூமாதேவி என்று அழைத்தார்கள். அந்தக் கால தமிழனும் தெய்வமென துதித்து வணங்கினான்.

Soil

தமிழ்தாயை கூட நீராருங் கடலுத்த நில மடந்தை எனப் போற்றினான் (தமிழ்த்தாய் வாழ்த்து - மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை).

“பொறை உடைமை” போதிக்கும் வள்ளுவர் கூட அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்றார்.

இன்று Land capability classification என்று மேலை அறிஞர்கள் சொல்லிக் கொடுத்ததை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, கரிசல் மண், செம்மண், வண்டல் மண், சரளை மண் என அவற்றை முறையாக வகைப்படுத்தி அவற்றில் எந்த மாதிரி பயிர்களை சாகுபடி செய்யலாம் என அறிந்து வைத்திருந்தான்.
மண்ணுக்கு இவ்வளவு மரியாதையா? ஆம்.. மண்ணென்றால் நாமெல்லோரும் நினைப்பது போல வெறும் ஜடம் அல்ல அது. சகல நுண்ணுயிர்களையும், பூச்சி, புழுக்களையும் தன்னகத்தே கொண்டு, ஒவ்வொரு இன்ச்சிலும் சுவாசித்து, உயிர் வளர்க்கும் உயிர் மூலம் அது. எனவேதான் ஒவ்வொரு பருவத்திற்கும் பயிர் செய்யும் முன், ஆதி தமிழன் மண் பூஜை செய்து விதை விதைத்தான்.

நமது இயற்கை விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வார் அய்யா சொன்னது போல,
“நுனி வீட்டுக்கு
நடு மாட்டுக்கு
அடி காட்டுக்கு” என்று அந்த மண்ணுக்கு உணவளித்தான் நமது பாரம்பரிய தமிழன்.

Nammalvar

அவ்வாறு இயற்கை சார்ந்து வகைப்படுத்தப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட அன்றைய மண் ஆரோக்கியமாக இருந்தது. காற்றோட்டமும், நீரோட்டமும் நிறைந்து, மண் புழு, தவளை, சிலந்தி என்று இன்ன பிற நன்மை செய்யும் ஜந்துக்களை ஒருங்கே கொண்டு பயிர் வகைகளை செழிப்பூட்டியது. ஆனால், இன்று மண் செத்துவிட்டது.

கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு.
“நாவு செத்தரே மண்ணிகே..
மண்ணே செத்தரே எல்லிகே?”
அதாவது, நாம் இறந்தால் மண்ணிற்கு, மண்ணே இறந்தால் எங்கு செல்வது?

ஆமாம்... முறையற்ற முறையில் இரசாயன உரங்களை இடுவதாலும் அளவுக்கதிகமாக பூச்சிக் கொல்லிகளை உபயோகிப்பதும் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் இறந்து இன்று மண் மலடாகிவிட்டது. Man, despite his artistic pretentions, his sophistication and his many accomplishments, owes his existence to a six inch layers of top soil and the fact that it rains என்று ஒரு சீன பழமொழி உண்டு.

ஆம், நாமெல்லாம் உயிர்வாழத் தேவையான எல்லாம் கிடைக்கும் மூலதனம், மேற்பரப்பில் காணும் ஆறு இன்ச் மண் மட்டுமே. அந்த ஆறு இன்ச் நல்ல மண் உருவாக ஓராயிரம் ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், முறையற்ற சாகுபடி முறைகளால் அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் ஓரிரு நாள் பெய்யும் அடை மழையில் இழந்து விடுகிறோம்.

Earthworm

இன்றைய நவீன ட்ராக்டர் கொண்டு உழும்போது மண் இறுகி கெட்டிப்படுகிறது. எனவே, காற்றோட்டம் குறைந்து, நீர் இறங்காமல், மண் புழு போன்ற நன்மை செய்யும் ஜந்துக்கள் மறைய நேரிடுகிறது. அந்தக்கால மரக்கலப்பை மண்ணை அளவாக கீறிவிட்டு காற்தோட்டத்திற்கு வழி வகுத்தது. எருது கொண்டு உழும்போது, அது இடும் சானம் மண் புழு மற்றும் நுண்ணுயிர்களுக்கு உரமாகி, அவை வெளிப்படுத்தும் கழிவுகள் பயிருக்கு ஊட்டச்சத்தை வாரி வழங்கின.

மண்புழு மேலும் கீழும் சென்று வரும் பாதைகள் இயல்பாக மண்ணை உழுதன. மண்ணில் காற்றை நிரப்பின. எனவேதான் மண் புழு உழவனின் நண்பன் என்றார்கள். அதெல்லாம், பள்ளி பரீச்சைக்கு படித்ததோடு சரி என்கிறீர்களா? Air pollution water pollutionஎன்று வருத்தப்படுகிறோம். வாதிடுகிறோம். எத்தனை பேர் Soil Pollution பற்றி கவலைப் படுகிறோம். ஒரு நாட்டின் மண் அழிந்து விட்டால் அந்த நாடே அழிந்துவிடும் என்றார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். அவ்வாறு அழியாமல் நமது மண்ணைக் காப்பது நமது கடமை அல்லவா?

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? வேறு எதுவும் இல்லை, எளிதில் மக்கக்கூடிய பொருட்களை மட்டுமே இனி அதிகம் உபயோகிப்பேன், எந்நாளும் மக்காத பிளாஸ்டிக் சார்ந்த எந்தப் பொருளையும் முடிந்தவரை தவிர்ப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்வதோடு, அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். அதிகளவு இரசாயன உரம், பூச்சிக் கொல்லி இன்றி விவசாயி உறுதி எடுத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பிளாஸ்டிக் தவிர்த்து வாழ்வது நமக்கும் முக்கியம். அப்போதுதான் நாம் உண்மையில் மண்ணின் மைந்தர்கள்..!.

............ - முனைவர் நா.லோகானந்தன்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்,

உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்! - பகுதி 1

உணவே மருந்து... நமது பாரம்பரியம்! - பகுதி 2

“கேடில் விழுச்செல்வம்...” மாடு! - நமது பாரம்பரியம் பகுதி - 4

மரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5

நீரின்றி அமையாது உலகு... நமது பாரம்பரியம் - பாகம் 6

பகுத்துண்டு பல்லுயிர் போற்றல்... நமது பாரம்பரியம் - பாகம் 7

இந்தக் கட்டுரையின் ஆசிரியர், முனைவர் நா.லோகானந்தன் கர்நாடக மாநிலத்தின் தும்கூரிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவராகப் பணியாற்றி வருபவர். “இயற்கை வேளாண்மையின் சமுதாய மற்றும் சூழலியல் சார்ந்த தாக்கம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர். மக்களின் நலனிலும் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை கொள்பவர்.

அவரிடம் உங்களுக்குப் பிடித்தவேலைகள் எவையென்று கேட்டால், “மண்ணையும், மரத்தையும், மாட்டையும் நேசித்தல்” என்றும் “மற்ற நேரத்தில் பயனுள்ள பல புத்தகங்களை வாசித்தல்..” என்றும் சிரித்த முகத்துடன் பதிலளிக்கிறார். உடலளவிலும் மனதளவிலும் இன்று நாம் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் நமது பாரம்பரியத்தை நம் காலத்தோடு இணைத்து வாழாமல் போனதே எனக் கருதுபவர். அந்தவகையில் நமது பாரம்பரியத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தொடர்ந்து எழுதிவருகிறார். படித்து நாம் பயன்பெறுவோம்.

You'r reading மண் பயனுற வேண்டும் - நமது பாரம்பரியம் பகுதி - 3 Originally posted on The Subeditor Tamil

More Namathu parambariyam News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை