மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது என்ன..? - விசாரணை அதிகாரி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

What happened in the Madurai vote counting centre, enquiry officers report

by Nagaraj, May 1, 2019, 14:07 PM IST

மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன.

அந்த அறிக்கையில்,
மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை ஏப்.19-ந் தேதியன்றே தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் முன்னிலையில், முத்திரையிடப்பட்டு, அவை வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பார்வையாளர், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரின் கையெழுத்துக்கள் இல்லை. அதேபோன்று, மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளின் சாவிகள் உடனடியாக கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.


மாவட்ட நிர்வாகம் உரிய திட்டத்தை வகுக்காததால், மதுரை மேற்கு தொகுதி ஆவண அறைக்குள் தாசில்தார் கே.சம்பூரணம் நுழைந்த பிறகுதான், காவல்துறையில் இருந்தவர்களுக்கும் மின்னணு எந்திரங்களுக்கு அருகில் இருந்த அறையில்தான் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதும் இவை முத்திரையிடப்படவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரின் அறிவுரையின்பேரில், துணை தேர்தல் அதிகாரி குருச்சந்திரன், கே.சம்பூரணத்தை, மதுரை மேற்குத் தொகுதியின் வாக்குச்சாவடி அதிகாரிகளின் டைரி மற்றும் 17ஏ படிவத்தை எடுத்து வருவதற்காக அனுப்பியிருக்கிறார். மதுரை மாநகராட்சியின் உதவியாளராக பணிபுரியும் பி.சூர்யபிரகாஷ், பி.ராஜபிரகாஷ் மற்றும் என்.சீனிவாசன் ஆகியோர் மதுரை மேற்கு தொகுதியின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் தாசில்தார் சம்பூர்ணத்துடன் 20-ந் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு சென்று மாலை 6.39 மணி வரை இருந்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்து,வெளியே உள்ள தனியார் கடையில், நகல்களை எடுத்துள்ளனர்.

நான்கு பேரும் உள்ளே சென்று ஏறத்தாழ 3 மணி நேரம் ஆனபிறகுதான், திடீர்நகர் காவல் ஆய்வாளர் டி.கே.சி.மங்யைர்திலகம், முத்திரையிடப்படாத அறையில் ஏதோ நடப்பதை அறிந்து விசாரித்ததுடன் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் பிரச்சனை குறித்து எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இரவு 7.35 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மூத்த அதிகாரிகள் தலையிட்டு, 4 பேரையும் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்தப் பிரச்சனை குறித்து அறிந்த வேட்பாளர்களும், முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன் இரவு 12 மணி வரை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ச.நடராஜனை தொடர்பு கொள்ள தொடர்ச்சியாக முயற்சித்தும், அவர் தொடர்புக்கு வரவில்லை.

இப்படியாக குறைபாடுகளை சுட்டிக் காட்டியுள்ள கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மேலும் பல விபரங்களை தனது விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


எந்தெந்தப் பொருட்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது. என்பது குறித்த எதுவும், இந்த பிரச்சனை வெளியே தெரியும்வரை உருவாக்கப்படவும் இல்லை; அவற்றைப் பற்றி பாதுகாப்பு பணியிலிருந்தவர்களுக்கும் எதுவும் தெரியாது. இது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை அப்பட்டமாக மீறியதாகும்.

மாவட்ட தேர்தல் அதிகாரி தினமும் காலையும் மாலையும் மையத்திற்குச் செல்ல வேண்டும் என லாக் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் இருக்கும் நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி 19-ந் தேதிக்குப் பிறகு இன்னும் சொல்லப்போனால், பாதுகாப்பு உடைக்கப்பட்டு, நள்ளிரவில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதும் கூட, வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லவில்லை. இது நிலைமையை கூடுதலாக சிக்கலாக்கியதோடு, பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய நம்பிக்கையை கணிசமான அளவு பாதித்தது..

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கெசட்டட் அதிகாரியும் போலீஸ் அதிகாரியும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் முறையாக பின்பற்றப்படவில்லை.

இவ்வாறு மிக விரிவாக பதிவு செய்துள்ள கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி தனது பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்:
தாசில்தார் சம்பூரணம் மற்றும் மூவர் முத்திரையிடப்படாத மதுரை மேற்கு தொகுதியின் அறைக்கு துணை தேர்தல் அதிகாரி குருச்சந்திரன் அறிவுரையின் பேரிலேயே சென்றிருக்கிறார்கள். குருச்சந்திரனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது)தான் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறார் என்பது தெளிவு. அவர்கள், மேலதிகாரியின் ஆணையை நிறைவேற்றியிருக்கிறார்கள். துணை தேர்தல் அதிகாரி குருச்சந்திரன் ஒரு பொறுப்பற்ற அரசு ஊழியராக நடந்து கொண்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளைப் பொறுத்தமட்டில், அவர்கள்தான் உள்ளே நுழைந்தவர்களை கண்டுபிடித்து விதிமீறலை வெளியே கொண்டு வந்தவர்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கை மையம் குறித்த அவர்களுடைய புரிதல் மிகவும் மோசமாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்குமான ஒருங்கிணைப்பு பெரிய அளவிற்கு முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர்தான் தேர்தல் நடத்தும் அதிகாரி. அவர்தான் தேர்தலை நடத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பானவர். அவர், தேர்தல் நடத்துவதில் வெளிப்படைத் தன்மையை உத்தரவாதப்படுத்தியிருக்க வேண்டும்.
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் கவலைகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும் அங்கு நீடிப்பது தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்த உதவாது.இவ்வாறு கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி அறிக்கையில் கூறியுள்ளார்.

வாரணாசியில் மோடியை எதிர்த்த ராணுவ வீரர் வேட்புமனு நிராகரிப்பு!

You'r reading மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது என்ன..? - விசாரணை அதிகாரி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை