
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்த கலாபவன் மணி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி திடீரென்று மரணமடைந்தார். திரிச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே தன் பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர் மயங்கி விழுந்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 45. கலாபவன் மணிக்கு மருத்துவமனை கட்டி, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென்பது லட்சியமாக இருந்தது. தற்போது, அதனை நிறைவேற்றும் வகையில் அவரின் மகள் டாக்டராகியுள்ளார். எர்ணாகளுத்திலுள்ள ஸ்ரீ நாராயணா மெடிக்கல் சயின்சில் 4ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வரும் ஸ்ரீலட்சுமி விரைவில் டாக்டர் படிப்பை நிறைவு செய்யவுள்ளார். அதற்கு பிறகு, தந்தையின் நினைவாக மருத்துவமனை கட்டி சேவையாற்ற முடிவு செய்துள்ளார்.