தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR- Special Intensive Revision) இந்திய தேர்தல் ஆனையத்தால் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ளூர் வாக்காளர்கள் பெருமளவு நீக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் தமிழக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி இருக்கின்றன.
தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் திமுக அரசு அடுத்தடுத்து அனைத்து கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டி உள்ளன.

ஏன் இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்?
வாக்காளர் பட்டியலில் இந்திய குடிமக்கள் மட்டுமே இடம் பெறுதல் அவசியம் என்பது முதன்மை நோக்கம்.
ஒரே நபருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருந்தால் நீக்கவும், இறந்தவர் பெயர் நீக்கவும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்காளர்களாக இருந்தால் கண்டறிந்து நீக்கவும் இந்த தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படுகிறது.
எப்படி மேற்கொள்ளப்படும்?
- பூத்துகள் நிலையில் வீடுகளுக்கு செல்லும் அதிகாரிகள் விண்ணப்ப படிவங்களை கொடுத்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி வாங்கிக் கொள்வர்.
- ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் படிவங்களை பூர்த்தி செய்தால் போதுமானது; ஆவணங்கள் தர தேவை இல்லை.
- வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், தேர்தல் அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
- பொதுவான பான் கார்டு, ரேஷன் கார்டு, 100 நாள் வேலைத் திட்ட கார்டு போன்றவற்றை ஆவணமாக அதிகாரிகள் ஏற்கமாட்டார்கள்.
- அதற்கு பதிலாக ஆதார் அட்டை/ பிறப்புச் சான்றிதழ்/ கல்விச் சான்றிதழ்/ பாஸ்போர்ட்/ இருப்பிடச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
- ஆதார் அட்டையை ஆவணமாக சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் சேர்க்கப்பட்டது.
- முந்தைய வாக்காளர் பட்டியல் திருத்தம், அடையாள அட்டைகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது; தீவிர திருத்தம் என்பது குடியுரிமை சட்டத்தின் கீழ் சான்றிதழ்களை வைத்து மேற்கொள்ளப்படுகிறது.
- இப்படி பெறப்படும் ஆவணங்கள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தி அமைக்கப்படும்.
- அந்த பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வாக்காளர்களுக்கு வாய்ப்பு தரப்படும்;
- இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் என்ன?
- மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை.
- மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், எல்ஐசி, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டைகள்.
- பிறப்புச் சான்றிதழ்.
- பாஸ்போர்ட்.
- கல்விச் சான்றிதழ்.
- நிரந்தர குடியுரிமை சான்றிதழ்.
- வன உரிமை சான்றிதழ்.
- ஓபிசி / எஸ்சி /எஸ்டி அல்லது எந்த ஒரு ஜாதி சான்றிதழ்.
- தேசிய குடியுரிமை ஆவணம்.
- மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் குடும்ப ஆவணங்கள்.
- மாநில அரசால் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான ஆவணம்.
- ஆதார் அட்டை; இது அடையாளத்தை உறுதி செய்யக் கூடிய ஆவணம் மட்டும். ஆனால் ஒருநபரின் பிறப்பு மற்றும் குடியுரிமைக்கான ஆவணமாக ஆதார் ஏற்கப்படமாட்டாது.
தமிழ் நாட்டில் எப்போது தொடங்கும்?
- தமிழகத்தில் நவம்பர் 4-ந் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி தொடங்கும்.
- வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பு டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும்.
- டிசம்பர் 9-ந் தேதி புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
- பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள், திருத்தங்கள் எதேனும் இருந்தால் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 (2026) வரை பெறப்படும்.
- வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஜனவரி 31 வரை மேற்கொள்ளப்படும்.
- இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ந் தேதி வெளியாகும்.
பீகாரில் ஏற்பட்ட சர்ச்சை
- தேர்தல் ஆணையம் கேட்டிருந்த ஆவணங்களை பலரால் தர இயலவில்லை.
- ஆதார் அட்டையை கூட பலரும் தரவில்லை
இதனால் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. - பிற மாநிலங்களில் வாக்காளர்களாக இருந்தவர்களும் நீக்கப்பட்டனர்.
தமிழக அரசியல் கட்சிகளின் அச்சம்
- உரிய ஆவணங்கள் இல்லாமல் போனால் தமிழ்நாட்டின் உள்ளூர் வாக்காளர்கள் கணிசமாக நீக்கப்படும் அபாயம் உள்ளது.
- அதே நேரத்தில், பிற மாநிலத்தவர்- அங்கு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர், உரிய அடையாள அட்டை / ஆவணங்கள் கொடுத்தால் தமிழக வாக்காளராக முடியும்.
- இப்படி வெளிமாநிலத்தவர் லட்சக்கணக்கில் தமிழ் நாட்டில் வாக்காளர்களாகும் போது தேர்தல் முடிவுகளில் மிகப் பெரும் தாக்கம் ஏற்படும் என்பது அரசியல் கட்சிகளின் அச்சம்.












