பழைய குற்றால அருவியில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்க தென்காசி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம் இந்தியாவின் பழமையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.இந்த நீரில் மருத்துவ குணங்கள் உள்ளன. வழக்கமாக பொதுமக்கள் எவ்விதமான தடையுமின்றி பழைய குற்றாலத்தில் குளித்து வந்தனர். உள்ளுர் மக்கள் பழைய குற்றாலத்தில் குளிப்பதைதான் விரும்புவார்கள். பழைய குற்றாலம் சுற்றுவாட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் இங்கு கடைகள் நடத்துகின்றனர். இதுதான், இந்த மக்களின் வாழ்வாதாரம்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தென்காசி மாவட்ட ஆட்சியர் பழைய குற்றாலம் பகுதியில் மக்கள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளார். யாரையும் அனுமதிக்க கூடாது என வாய்மொழியாக உத்தரவும் பிறப்பித்ததாக தெரிகிறது. இதனால் உள்ளுர் மக்கள் கூட பழைய குற்றாலத்தில் குளிக்க முடியா நிலை உருவானது.
இதனால், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பழைய குற்றாலத்தில் மக்களை குளிக்க அனுமதிக்கவில்லை. வழக்கம் போல் பொதுமக்கள் பழைய குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க
தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகஙள நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, பழைய குற்றால அருவியில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தவிட்டது.
இந்த வழக்கையும் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.