
தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் பைக் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் புளியங்குடி டி.எஸ்.பி., மீனாட்சி நாதன் மேற்பார்வையில், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆவடிவேல் தலைமையிலான குழு நேற்று மதுரை - தென்காசி தேசிய சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்
அப்போது, கடையநல்லூர் மங்களாபுரம் சோதனைச் சாவடி பகுதியில் பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். பைக்கில் ஒட்டப்பட்டு இருந்த பதிவு எண்ணை போலீசார் பரிசோதித்துப் பார்த்த போது, அது போலியான பதிவு எண் என தெரிய தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்த போது, புளியங்குடி சிந்தாமணி சான்றோர் மடத்து தெருவை சேர்ந்த அட்சய லிங்கம் என்பவரின் மகன் மனோகரன்( வயது 45 )என்பது தெரியவந்தது
இவர் கடையநல்லூர் , தென்காசி பகுதிகளில் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்து, பைக்குகள் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. திருடும் பைக்குகளை குறைந்த விலையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து, மனோகரனை கைது செய்தனர். மேலும், அவர் திருடி விற்பனை 5 ஸ்ப்ளெண்டர் ரக பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.