
தனது மகன் உயிரிழந்த நிலையில் அவருடன் பிறந்த ஏழு சகோதரிகள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக தென்காசி ஆட்சியரிடன் தாய் ஒருவர் மனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள அணைந்த பெருமாள் நாடனூர் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் கடந்த மார்ச் மாதம் மீன் பிடிக்க செல்வதாக தனது தாயிடம் கூறி சென்றுள்ளார். குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் மாதவனை சரமாரியாக தாக்கி குளத்தில் போட்டதாக கூறப்படுகிறது . தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். தொடர்ந்து , சிகிச்சையில் இருந்த நிலையில் அவர் இன்று( ஏப்ரல் 24) காலை சிகிச்சை பலனின்றி என்று உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மாதவனின் தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனதில் தனது கணவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். எனக்கு இறந்த மகனுடன் சேர்த்து மொத்தமாக 8 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 7 பேர் பெண் குழந்தைகள். எனது மகனின் வருமானத்தை நம்பி இருந்த நிலையில் தற்போது எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறும், தங்கள் பெண் குழந்தைக்கு ஏதேனும் அரசு பணி வழங்க வேண்டும் என்றும் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.