
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களின் புழக்கம் தென்காசி மாவட்டத்தில் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.
அந்த வகையில், கேரளாவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை தமிழக- கேரளா எல்லை வழியாக சொகுசு காரில் கடத்திக் வந்து தமிழகத்தை சேர்ந்த நபர்களிடம் இலத்தூர் விலக்கு பகுதியில் விற்பனை செய்து கொண்டிருப்பதாக இலத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை பிடிக்க முயற்சித்தன.ர போலீசாரை பார்த்த அந்த கும்பல் தப்பி ஓடியது. விரட்டி சென்ற போலீசார் இருவரை கைது செய்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
பிடிபட்டவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சித்திக் என்பதும் அவருடன் சேர்ந்து பிடிபட்ட நபர், சித்திக்கிடம் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்ற தென்காசி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த சுமார் 121 கிலோ மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சொகுசு கார் மற்றும் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.