இன்ஸ்டாகிராம் பழக்கம் உயிரை எடுத்தது: ஆலங்குளம் இளம் பெண் எழுதிய 8 பக்க உருக்கமான கடிதம்

suicide-heartbreaking-letter-written-by-alankulam-young-woman

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் கோவில் நகரை சேர்ந்தவர் கண்ணன் என்பவரின் மகன் சக்திவேல்(வயது 32). இவர், ஆலங்குளத்தில் டிராக்டர் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக மருதம்புத்தூரை சேர்ந்த 26 வயது திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி 7 வருடங்களாகி விட்டது. குழந்தை இல்லை. இந்நிலையில் அந்த இளம்பெண்ணிடம் பழக்கத்தை தொடர்ந்து வளர்த்து வந்த சக்திவேல், அடிக்கடி மருதம்புத்தூருக்கு வந்து அந்த பெண்ணை நேரில் சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

பின்னர் , இளம்பெண்ணிடத்தில் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். அப்போது, இளம்பெண்ணுக்கு தெரியாமலேயே தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், இளம்பெண்ணின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால், அந்த இளம்பெண் சக்திவேலுடன் பேசுவதை நிறுத்தினார். இதன காரணமாக , ஆத்திரமடைந்த சக்திவேல், ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். மேலும், ரூ.4 லட்சம் வரை அந்த பெண்ணிடம் இருந்த பணத்தை பறித்துள்ளார். சமீபத்தில் மேலும் 1 லட்சம் ரூபாய் சக்திவேல் கேட்கவே, அதிர்ச்சியடைந்த இளம்பெண், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே , அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவதாக சக்திவேல் மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன அந்த பெண் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் அழுதபடி தெரிவித்துள்ளார்.

அவரின், பெற்றோர், ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, சக்திவேலை பிடித்த போலீசார் விசாரித்தனர். பின்னர், அவரிடம் இருந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளனர். தொடர்ந்து, இளம்பெண் தனது கணவரை பிரிந்து தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். ஆனால், சக்திவேல் அந்த பெண்ணுடன் இருந்த அந்தரங்க வீடியோக்களை மனைவியின் செல்போனில் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்துள்ளார். தனது மனைவியின் செல்போனில் இருந்து மருதம்புத்தூரை சேர்ந்த களக்கோட்டி என்பவரின் மகன் முத்துராஜ்(36) என்பவருக்கு பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, முத்துராஜ் தனது நண்பரான மருதம்புத்தூரை சேர்ந்த வைகுண்டம் என்பவரின் மகன் முருகசேனுடன் சேர்த்துக்கொண்டு சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை தங்களது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளனர். மறுத்தால், வீடியோவை சமூகவலைத் தளத்தில் பரப்புவதாகவும் மிரட்டியுள்ளனர். ஏற்கனவே, சக்திவேலால் தனது வாழ்க்கையை இழந்த இளம்பெண், மேலும் 2 பேர் சேர்ந்து வீடியோவை காட்டி மிரட்டியதை வெளியில் யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் நேற்று காலையில் தனது பாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் . இதையடுத்து, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரடி விசாரணையில் ஈடுபட்டார். வீட்டை சோனையிட்ட போது,8 பக்கங்களுக்கு எழுதப்பட்ட உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகியோர் தான் காரணமென்றும் தன்னை துன்புறுத்தி பணத்தை பறித்ததாகவும் பாதிக்கப்பட்ட இளம் பெண் உருக்கமா எழுதியுள்ளார்.

இதையடுத்து , வழக்குப்பதிவு செய்த போலீசர், நேற்று மாலையில் 3 பேரையும் அதிரடியாக கைது செய்து, நீதிபதியிடம் ஆஜர்படுத்தி ஆலங்குளம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சக்திவேலின் மனைவி மீதும் வீடியோ பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE ABOUT :