தூத்துக்குடி மாவட்டத்தில் 28 ஆம் தேதி பார்களை அரசிடம் ஒப்படைக்க முடிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி மதுபான பார்களை மூடி அனைத்து கடைகளையும் அரசிடம் ஓப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு டாஸ்மாா்க் பாா் உாிமையாளர்கள் பார் கட்டிட உாிமையாளர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன் செயலாளர், பாலமுருகன், பொருளாளர் ராமநாதன், ஆகியோர் கலால் பிாிவு உதவி ஆணையாிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது "2004ம் ஆண்டு முதல் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கிய காலம் முதல் அரசு அனுமதி பெற்று மதுபான மதுகூடம் (பார்) நடத்தி வருகிறோம்.

டாஸ்மாக் கடையில் நடக்கும் வியாபாரத்தில் எங்களுக்கு பணம் கட்டுவதற்கு சதவீதம் அடிப்படையில் 1.40 சதவீதம் (பஞ்சாயத்து) முதல் 1.60 சதவீதம் (மாநகராட்சி) வரை என்ற அடிப்படையில் அரசுக்கு பணம் செலுத்தி கடை நடத்தி வருகிறோம். இதில் எங்களுக்கு மதுபானகூடத்தில் 30 சதவீதம் நபர்கள் தான் உள்ளே வருகிறார்கள். பாக்கி உள்ள மீதி நபர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர்.

அதற்கும் சேர்த்து தான் நாங்கள் பணம் செலுத்திகிறோம். அனைத்து டாஸ்மாக் கடை அருகில் வெளியே பெட்டிகடைகள் நிறைய உள்ளன. அது மினி பார் போலவே செயல்படுகிறது. பலமுறை இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இதுநாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடத்திற்கு அரசு மாதம் ரூ.2,500- முதல் ரூ.6,000- வரை வாடகையாக கொடுக்கிறது. ஆனால் நாங்கள் அந்த இடத்திற்கு மதுபான கூட உரிமையாளர் அட்வான்சாக ரூ.2,00,000- முதல் ரூ.5,00,000- வரை கொடுத்து வாடகையாக மாதம் ரூ.1,00,000- முதல் ரூ.1,50,000- வரை செலுத்தி வருகிறோம்.

மேலும் திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், கரிக்களம் காலனி, மீன்பிடித் துறைமுகம் போன்ற இடங்களில் எப்போதும் மர்ம நபர்கள் தங்கு தடையின்றி மதுபானங்கள் விற்கின்றனர். இவர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்தபடி ஏற்கனவே டெண்டர்கள் விடப்பட்ட கடைகளில் அரசு நிர்ணயித்த தொகையினை பார்கள் ஏலம் எடுத்து அரசு சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு கடை நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது சில தனிநபர்கள் எந்தவொரு சட்டத்திற்குட்படாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

ஆனால் மதுபானகூடம் (பார்) நடத்தி வரும் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு செய்து வருகின்றனர். இதனால் மதுபானகூட உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இப்படியே சென்றால் மதுபானகூட உரிமையாளர்கள் தொடர்ந்து மதுகூடம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாகி விடுவார்கள்.

மேலும், காவல் நிலையங்களில் உயர் அதிகாரிகளின் அழுத்தத்தின் பேரில் புள்ளிவிவர கணக்கிற்காக வழக்கு பதிவு செய்வதற்கு எங்களிடமே ஆட்கள் கேட்கிறார்கள். அரசு விதிகளின்படி உரிய உரிமம் பெற்று அரசுக்கு உரிய நிர்ணயத் தொகையை செலுத்தி மதுகூடம் (பார்) நடத்தும் உரிமையாளர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ய முயற்சிக்கிறார்கள். வருகிறார்கள்.

மேற்கண்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் வரும் 28ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அரசிடம் ஓப்படைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.