கோவில்பட்டி : தனியார் சந்தை கால்கோள் விழா... சபாநாயகர், அமைச்சரை கண்டித்து மக்கள் போராட்டம்

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழா நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டக்குளத்தில் தனியார் தினசரி சந்தைக்கான கால் கோள் விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக சபாநாயகர் அப்பாவு, சமூக நலன் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்த சந்தை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும், முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி பல்வேறு அமைப்பினர் இன்று காலை கருப்புக் கொடி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். மேலும் தெற்கு திட்டக்குளத்தில் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த விழாவுக்கு வருகை தந்த தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து ஐந்தாம் தூன் நிறுவனத் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் தமிழ் பேரரசு கட்சியினர், 5வது தூண் அமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பிருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் 23 பேரை கைது செய்துள்ளனர்.


விழா அழைப்பிதழில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் அவர்கள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.