மாலத்தீவுக்கு 80 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்தல் : தூத்துக்குடியில் சிக்கிய கப்பல்

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாக கடத்தப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

நேற்று மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தூத்துக்குடி அருகே கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் சிறியவகை கப்பல் சென்றது. அந்த கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, கப்பலில் இரந்த ஹசீஸ் எனும் செறிவூட்டப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்தேனசியாவை சேர்ந்த இருவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு போதைப்பொருளை கடத்தி செல்வதும், அதன் மதிப்பு ரூ.80 கோடி என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.