தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு வகையான போக்குவரத்து வசதி கொண்ட நகரமாக தூத்துக்குடி உள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2024 செப்டம்பர் மாதம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் சுரேஷ் பணிகள் 80% நிறைவடைந்துள்ளதாகவும், அனைத்து பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று கூறியிருந்தார்.
இந்த விரிவாக்க பணியில் புதிய முனையக் கட்டடம், ஓடுபாதை நீட்டிப்பு, தொழில்நுட்ப பிரிவு, கட்டுப்பாட்டு கோபுரம், புதிய தீயணைப்பு நிலையம் போன்றவை அடங்கும். புதிய முனையம், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகவும், அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படுகின்றது.
புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 விஐபி அறைகள், லிப்ட் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டிடங்கள் முழுவதும் சூரிய சக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது, தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு மட்டும் விமானம் இயக்கப்படுகிறது. பணிகள் முடிந்ததும் ஹைதராபாத், அகமதாபாத், மும்பை, திருவனந்தபுரம் என நாட்டின் பிற நகரங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படும்.
தற்போது, 78 பயணிகள் வரை செல்லும் ஏடிஆர் ரக விமானங்கள் தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் சுமார் 250 பயணிகள் செல்லும் ஏ 321 ரக ஏர்பஸ் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3611 மீட்டர் ஆகும். இதற்கு அடுத்தபடியாக 3115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட 2வது பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக தூத்துக்குடி மாறியுள்ளது.
பல லட்சம் பயணிகளை கையாளுவதற்கு ஏற்ப புதுப்பொலிவுடன் தயாராகிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி விமான நிலைய பிரத்தியேக படங்களை இங்கு காணலாம்.