
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நீல்புரத்தில் கார் மீது பைக் மோதிய சம்பவத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருச்செந்தூர் அருகே நேற்று நடைபெற்ற விபத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நவீனை தேடி திருச்செந்தூரைச் சேர்ந்த ஒரு தரப்பினர் நீலபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் நவீனின் தங்கை வின்சியா இருந்துள்ளார். வீட்டுக்கு வந்த கும்பலை கண்ட வின்சியா, தந்தை கல்கண்டு ஜெபராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். இதனால் , கல்கண்டு ஜெபராஜ் வீட்டிற்கு வந்த போது, அந்த கும்பல் அவரை செங்கலால் தலையில் தாக்கியுள்ளது.
இதையடுத்து கல்கண்டு ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தந்தை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற நவீனை திருச்செந்தூர் எம்.எல்.ஏ அலுவலகம் அருகே எதிர்தரப்பு அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சாலையோர கடையில் இரவு உணவு வாங்கிக் கொண்டிருந்த திருச்செந்தூரைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் அரிவால் விட்டு விழுந்தது. காயம் அடைந்த 5 பேரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.