தமிழக ஆளுநர் ராஜினாமா செய்ய திருச்செந்தூர் முருகனிடத்தில் காங்கிரசார் சிறப்பு பூஜை

congress-members-special-puja-at-tiruchendur-murugan-to-demand-resignation-of-tamil-nadu-governor

தமிழ்நாடு ஆளுநர் பதவியை ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தினர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் இது நாள் வரை முரண்பாடான விஷயங்களை மட்டுமே செய்து வருகிறார்.தமிழக ஆளுநர் செயல்பாடு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர ஊரு விளைவிப்பதாக இருக்க கூடாது. ஆனால் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் எந்த மசோதாக்களையும் நிறைவேற்ற விடாமல் தடையாக இருப்பதும் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டும் வருகிறார்.தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் எதிரான கருத்துக்களையும் கூறி வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் பாதுகாப்பு அளிக்க தமிழக காவல்துறையும், மற்றும் அரசு அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்து பூச்செண்டு கொடுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது முதல் முடியும் வரை தமிழக அரசு அதிகாரிகள் அவருக்கு உண்டான கடமைகளை செய்து கொண்டு இருப்பதை அவர் உணராமல் இருப்பது ஏன் ? என்பது தெரியவில்லை.

இப்போது உச்ச நீதிமன்றம் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தெளிவாக உத்தரவிட்ட பிறகும் அவர் மீண்டும் பிடிவாதத்தை காட்டிக் கொண்டிருப்பது தமிழக மக்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள் என்பதை தனக்கு சாதகமாக்கி கொள்கிறார் என்றே தோன்றுகிறது. இது வரை தமிழக ஆளுநரை உச்ச நீதிமன்றம் இப்படி கண்டித்தது இல்லை. குட்டு பட்டும் அவர் திருந்துவதும் இல்லை.எனவே இனி கடவுள் தான் தமிழ்நாடு ஆளுநரை திருத்த வேண்டும். அவர் வகிக்கும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதே தமிழ்நாட்டுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் நல்லது. ஏன் அவருக்கும் நல்லது.எனவே தமிழ்நாட்டின் நலன் கருதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை விட்டு விலகி ராஜினாமா செய்ய வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு சார்பில் மாநில பொதுச் செயலாளர் நாகர்கோவில் ஆர்.எஸ்.ராஜன் தலைமையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் "முருகன் சன்னதியில் இன்று( ஏப்ரல் 22)அதிகாலை "சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.