திமுகவுக்கு தூத்துக்குடியில் அண்ணாமலை திடீர் பாராட்டு

Annamalai-suddenly-praises-DMK-in-Thoothukudi

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இந்தியா ' பாகிஸ்தான் பிரச்னை இன்று நேற்று அல்ல பல ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாத மையங்களைதான் நாம் அடிக்கின்றோம். ஆனால் இந்தியாவில் மக்கள் மீது போர் தொடுக்கிறார்கள். நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள். இந்தியாவைப் பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கின்றோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் ட்ரோன்-க்கு பதிலடி கொடுத்து இருக்கின்றோம்.

நாம் மிகப்பெரிய பொருளாதார நாடு. பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப் போறதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எரிய வேண்டும் அதற்காகத்தான் இந்த போர் நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தீவிரவாதிகள் பூமியில் எங்கு ஒளிந்து இருந்தாலும், பூமிக்கு கீழ் ஒளிந்திருந்தாலும் தீவிரவாதிகளை துளாவி பிடித்து இல்லாமல் செய்து விடுவேன் என்று தீவிரவாதத்திற்கு எதிராக மோடியை சங்கல்பம் எடுத்து இருக்கின்றார். போர் இன்று, நாளை முடியாது, இதற்கு மேல் நாம் போக தான் போகிறோம். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும்.

பாகிஸ்தானை பொறுத்த அளவில் ஆர்மி தான் அரசை கண்ட்ரோல் செய்கின்றார்கள். பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது, நாம் அவ்வளவு பலமாக இருக்கின்றோம். நாம் நினைத்தால் ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம்

சசிதருர் எம்பி இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். பாகிஸ்தானை எதிர்ப்பதில் அனைவரும் ஒன்றாக இருக்கின்றார்கள் திமுக உட்பட. மேலும், திமுக பேரணி நடத்துகிறார்கள் வரவேற்கத்தக்கது., அதே நேரத்தில் இந்திய அரசிற்கு முழுமையாக ஒத்துழைப்பையும் திமுக அரசு கொடுக்க வேண்டும் 'என்றார்.