தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. கடந்த வாரம் இந்த தசரா திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தார்கள். அது மட்டுமல்லாமல், குலசேகரன்பட்டினம் கடற்கரை சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இதற்கிடையில் கடந்த மாதங்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ஏற்பட்ட கடல் அரிப்பு காரணமாக 100க்கும் மேற்பட்ட பனைமரங்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகே இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பனைமரங்கள் ஒரே நேரத்தில் கருகி போன சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரையோரம் வரிசையாக உள்ள பனைமரங்களின் உச்சியில் உள்ள பனை ஓலைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் காய்ந்து போய் காணப்படுகின்றன. என்ன காரணத்திற்காக பனைமரங்கள் கருகினற என்று தெரியாமல் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பனைமரங்கள் அமைந்துள்ள இடத்தின் நேர் எதிரே தான் உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இறங்கும் தளம் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் காரணமாகவே இந்த பனைமரங்கள் கருகினவா? என்கிற கேள்வியும் எழ தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக, பனைவாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












