தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் பேச்சு போட்டியில் பங்கு பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா - விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி சுமார் 25 ஆண்டுகள் இயங்கி வருகிறது . இப்பள்ளியில் சுமார் 756 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இந்த அரசுப் பள்ளி தனியார் பள்ளிக்கு ஈடு இணையாக பல சாதனைகள் செய்து வருகிறது. இங்கு, பயின்று வரும் 11ஆம் வகுப்பு மாணவி லதா என்பவர் தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பினை பெற்றார். 38 மாவட்டங்களில் இருந்து 1200 மாணவர்கள் கலந்து கொண்ட திருக்குறள் மாணவர் மாநாட்டில் லதா பேச்சு போட்டியில் கலந்து கொண்டு திருக்குறள் பெரிதும் அறத்தினையே வலியுறுத்துகிறது என்ற தலைப்பில் பேசி மாநில அளவில் முதல் இடம் பெற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் , தமிழாசிரியர் மாணிக்கராஜ், தமிழாசிரியை தேவி சந்தனமாரி ஆகியோர் மாணவிக்கு பயிற்சி அளித்து வெற்றிக்கு உதவிக்கரமாக இருந்தனர். மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி லதா, வசிக்க சரியான வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். பெற்றோர் ஏழ்மையான சூழ்நிலையில் இரு பெண் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். அவளுடைய தகப்பனார் உப்பளத்தில் வேலை செய்து வருகிறார். தாயாருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இத்தகைய சூழலில் லதா, தங்கள் குடும்பம் பாதுகாப்பாக வாழ வீடு ஒன்றை கட்டி கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் . வெற்றிக்கு ஏழ்மை ஒரு தடைக்கல்லாக அமையுமா?... அதனை படிக்கல்லாக மாற்ற நமது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமா?







