தமிழகத்திலிருந்து வாரணாசி, அயோத்தி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சென்ற ரயிலில் நாக்பூர் பகுதியில் வட மாநிலத்தவர்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை , தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 நாட்டுப்புற கலைஞர்கள் 6 பெட்டிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த ரயில் நேற்றிரவு 12 மணியளவில் நாக்பூர் அருகே ஜோலாப்பூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது, அங்கு ஏராளமான இளைஞர்கள் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏற முயன்றனர். ரயிலின் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால், கண்ணாடியை உடைத்து ஏற முயன்றனர். இதனால், தமிழக கலைஞர்களுக்கும் அந்த இளைஞர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், தமிழக கலைஞர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள தஞ்சாவூரிலுள்ள தென்னக பண்பாட்டு மையம் பேருந்து மற்றும் வேன் மூலம் தமிழக கலைஞர்களை வாரணாசிக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.