நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சி ஏழாவது வார்டு திமுக கவுன்சிலராக சுதா உள்ளார் . இவரது கணவர் சுரேஷ் பாக்கியம். திமுகவைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இன்னோவா ஹை கிராஸ் கார் வாங்கியுள்ளார். அதனை தற்காலிகமாக பதிவு செய்த நிலையில், கடந்த மாதம் நிரந்தர பதிவுக்காக வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். தாமதக் கட்டணம் , ஆயுட்கால வரி உள்ளிட்டவற்றுக்காக 4 லட்சத்து 35 ஆயிரத்து 490 ரூபாயை இவர் செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுள்ளார்.
ஆனால் ,இ வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பெருமாள் 20, 000 ரூபாய் லஞ்சமாக தந்தால் மட்டுமே வாகனத்தை பதிவு செய்து தருவேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சுரேஷ் பாக்கியத்திற்கு ஆதரவாக வள்ளியூர் பேரூராட்சியின் 1வது வார்டு உறுப்பினர் லாரன்ஸ் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் . அதற்கு மற்ற நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வாங்குவேன், நீ சொல்வதால், 20, 000 ரூபாய்க்கு சம்மதிக்கிறேன் திருநெல்வேலியில் உள்ள மோட்டார வாகன ஆய்வாளர் பிரபாகரனிடம் சென்றால் 50 ஆயிரம் ரூபாய் கேட்பான். நாற்பது லட்சம் ரூபாய்க்கு கார் வாங்க முடிகிறது ... 20 ஆயிரம் கொடுக்க முடியாதா ? என்று பெருமாள் பேசியுள்ளார்.
இதையடுத்து, சுரேஷ் பாக்கியம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்டதாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். புகாரில் ' 20 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில் அந்த தொகை தர முடியாது என்று நான் கூறியதால் 15 ஆயிரம் வாங்கிக் கொள்ள பெருமாள் சம்மதித்தார். உடனடியாக பெருமாள் கொடுத்த வங்கிக் கணக்கில் முதலில் 10 ஆயிரம் கட்டினேன். 5 ஆயிரத்தை மறுநாள் தருவதாக தெரிவித்தேன். ஆனால், 5 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வாகனத்தை கொண்டு வா பதிவு செய்து தருகிறேன் எனக் கூறி பெருமாள் என்னை திருப்பி அனுப்பி விட்டார் ' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, சுரேஷ் பாக்கியத்தின் புகாரில் உண்மை தன்மை இருப்பதை அறிந்து , மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பணியிட மாற்றம் கூட செய்யப்பட வில்லை. வாகன பதிவும் செய்தும் கொடுக்கப்படவில்லை. வழக்குப் பதிவு செய்த பிறகும் பெருமாள் தொடர்ந்து அங்கேயே பணியாற்றி வருகிறார். அப்படியென்றால், லஞ்சம் வாங்குபவர்களுக்கு எப்படி பயம் வரும்? என்கிற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.