நெல்லை, நாலுமுக்கு எஸ்டேட்டில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பேரூராட்சிக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்டது மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதியாகும். இங்குள்ள நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளிலும் வசிக்கும் தொழிலாளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நாலுமுக்கு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ் அறிவுரையின்பேரில், மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அப்போது நாலுமுக்கு பகுதியில் மின்மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து செயல் அலுவலர் ஆஷா ராணி உத்தரவின்பேரில் தற்காலிக நிவாரணமாக நாலுமுக்கு பகுதி மக்களுக்கு டிராக்டர் டேங்கர் மூலமாக குடிநீர் எடுத்துச்செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பழுதான மின்மோட்டார் சரி செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகம் தடைபடாமல் இருப்பதற்காக தற்காலிக நிவாரணத்தை உடனடியாக எடுத்த மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.