உட்கார ரூ.10 தான் வாடகை... - மாநகராட்சியின் அலட்சிய போக்கால் நூதன பண வேட்டை..!

நெல்லையில் ஆம்னி பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததைப் பயன்படுத்தி ஒருத்தர் ப்ளாஸ்டிக் இருக்கைகளை ரூ.10 க்கு வாடகை விட்டு சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கு மாநகராட்சியின் செயல்பாடுகளே காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் மாலை நேரங்களில் புறப்பட்டு செல்லும்போது ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் மாநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது என்பது பயணிகளின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.

குறிப்பாக வண்ணார்பேட்டை வடக்கு பைபாசில் செல்லப்பாண்டியன் சிலை மேம்பாலம் இறங்கும் பகுதியில் இரவில் அதிக நேரம் ஆம்னி பஸ்சுகளை நடுரோட்டில் நிறுத்தி சரக்குகளையும், பயணிகளையும் ஏற்றி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வண்ணார்பேட்டை ஆம்னி பஸ் நிறுத்தத்தில் போதிய வசதிகளாவது ஏற்படுத்தி தந்தால் பயணிகள் சிரமமின்றி இருப்பார்கள் என்பதும் ஒருதரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பல்வேறு வழித்தடங்களுக்கும் செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் இந்த வழியாக வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.

ஆனால் அங்கு மாநகராட்சி மூலமாக பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுவது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. ஆம்னி பஸ் நிறுத்தும் பகுதி மாலையில் தொடங்கி சுமார் 6 மணி நேரம் வரை பரபரப்பாக இருக்கும். பயணிகள் தங்கள் உடைமைகளை சுமந்தபடி வருவார்கள். சில பயணிகள் அவர்களது உறவினர்களுடன் வருவார்கள்.

ஆனால் அவர்கள் பஸ் வரும்வரை அமர்வதற்கு அந்த இடத்தில் இருக்கை வசதி என்பது இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் அமர முடியாமல் கடும் சிரமம் அடைந்து வந்தனர். முதியவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. தினந்தோறும் 100 பஸ்கள் வரை வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு இந்த வழியாக வந்து பயணிகளை ஏற்றி செல்லும் நிலையில் இருக்கைகள், குடிநீர் வசதிகள் இல்லை என்பது பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கவனித்த அருகில் உள்ள வாகன காப்பகத்தின் உரிமையாளர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்காக நாற்காலிகளை அமைத்துள்ளார். மேலும் அதற்கு கட்டணமாக ரூ.10 வசூலித்து வருகிறார். தினமும் மாலை 6 மணிக்கு அந்த பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் இருக்கைகளை வரிசையாக போடும் அந்த நபர், 12 மணி வரை அமர்வதற்கு ரூ.10 கட்டணம் என்று பேப்பரில் எழுதி அந்த இருக்கையில் ஒட்டியும் வைத்துள்ளார். இதேபோல் செல்போன் சார்ஜ் போடுவதற்கும் ரூ.10 கட்டணம் என அங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக இந்த ஐடியாவை பயன்படுத்தி அவர் வசூல் செய்து வருகிறார். பஸ் ஏறுவதற்காக வரும் பயணிகளும், எவ்வளவு நேரம் தான் நின்று கொண்டே இருப்பது. ரூ.10 தானே என்று நினைத்து காசை கொடுத்துவிட்டு இருக்கையில் அமருகின்றனர். பயணிகள் வசதிக்கு ஏற்ப இருபுறமும் கைப்பிடி உள்ளவை, கைப்பிடி இல்லாதவை என விதவிதான இருக்கைகளை அந்த நபர் போட்டு வைத்துள்ளார்.
தினந்தோறும் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக இந்த நாற்காலிகளை பயன்படுத்த மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை மாநகராட்சி நிறைவேற்றாததால் இதனை சில தனியார் வணிக நிறுவனங்கள் உபயோகப்படுத்திக் கொண்டு பணம் வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.