திசையன்விளை அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி ஏழரைப் பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள பெட்டைக்குளம் கருமாரிஅம்மன் கோவில் அருகேயுள்ள யாதவர் தெருவை சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது67). இவர் நேற்று முன்தினம் மாலையில் பெட்டைக்குளத்தில் இருந்து கல்விளைக்கு செல்லும் சாலையில் தனது மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார் அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த முகமூடி அணிந்திருந்த மர்மநபர் திடீரென்று சுப்பம்மாவை தாக்கி அவரை கீழே தள்ளியுள்ளார்.
பின்னர், சுப்பம்மாள் தப்பிக்க முடியாதபடி கையை காலால் மிதித்து கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன்தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மொபட்டில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.இதுகுறித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டனர்.
அப்போது, ஊர் எல்லையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வண்டியை நிறுத்தி முகமூடியை அணிந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அவரின் முகமும் தெளிவா தெரிந்தது. இதையடுத்து, சிசிடிவி காட்சியை கொண்டு கொள்ளையனை வலைவீசி தேடிவந்த காவல்துறையினர், கூத்தங்குழி சுனாமி நகரை சேர்ந்த மிக்கேல் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.