சிவந்திப்பட்டியில் கொட்டி தீர்த்த மழை ... காரணம் என்ன?

மாலத்தீவு அருகே நீடித்த காற்று சுழற்சி வங்க கடல் ஈரப்பதத்தை தென் தமிழகத்தின் உள் பக்கம் இழுப்பதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அடைமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் 123 மிமீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தேமாங்குளத்தில் 117 மிமீ மழையும் ஸ்ரீவைகுண்டத்தில் 106 மிமீ மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் 96 இடங்களில் மிதமான மழையும் 17 இடங்களில் கனமழையும் 2 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.நெல்லை மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 1919 கன அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 674 கன அடியாக உள்ளது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.