ஜமைக்கா நாட்டில் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷின் (31) உடல் 78 நாட்கள் கழித்து இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
நெல்லை சந்திப்பு, புளியந்தோப்பு நடுத்தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் விக்னேஷ். கடந்த ஒரு வருடமாக ஜமைக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக இவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து பணம் பறித்துள்ளனர். பின்னர், தப்பிச் செல்லும் போது, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் விக்னேஷ் உயிரிழந்தார். மேலும், இருவருக்கு காயம் ஏற்பட்டது. விக்னேஷின் உடல் ஜமைக்கா அதிகாரிகள் வசம் இருப்பதாகவும், சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு 10 நாட்களுக்குள் உடல் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் உடலை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, சத்தியம் தொலைக்காட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்தது. திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் தொடச்சியாக சத்யம் தொலைக்காட்சி சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தூதரக அதிகாரி மயங்கு ஜோசியுடனும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
விக்னேஷின் உடலை அனுப்புவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதிகள் வழங்கப்பட்டாலும், தேவையான நிதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி விக்னேஷின் உடல் ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவின் மியாமி , நியூயார்க் , மும்பை வழியாக திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் வழியாக சொந்த ஊரான மீனாட்சி புரத்துக்கு கொண்டு வரப்பட்டது.
விக்னேஷின் உடல் இன்று வீட்டிற்கு வந்தபோது, அவரது தாய் பொன்னம்மாள், சகோதரி ருக்மணி, அத்தை சந்திரா ஆகியோர் சடலத்தை பார்த்து கண்கலங்கினர். துயரமான நேரத்தில் உடலை தாயகம் திருப்பிக்கொண்டு வர உதவிய சத்தியம் தொலைக்காட்சிக்கும், திருநெல்வேலி எம்பி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
விக்னேஷின் சகோதரி ருக்மணி, தமிழ்நாடு அரசு தனக்கு அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.விக்னேஷின் உடல் வீட்டுக்கு வந்ததும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், பாஜக மாவட்ட தலைவர் முத்து பலவேசம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்த்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
விக்னேஷின் இறுதிச் சடங்குகள், அவரது தாய், சகோதரி, உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. 78 நாட்களுக்கு பிறகு அவரின் சடலத்துக்கு இறுசிச்சடங்கு செய்து உறவினகர்கள் , கிராம மக்கள் பிரியாவிடை அளித்தனர்.
இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்த திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' தமிழக அரசு ஜமைக்காவிலிருந்து திருநெல்வேலிக்கு விக்னேஷின் உடலை கொண்டு வருவதற்காக 18 லட்சம் தருவதாக கூறியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த தொகையை கொடுத்து விடும் பட்சத்தில் தமிழக அரசு சார்பாக வழங்கப்படவிருந்த 18 லட்ச ரூபாயை விக்னேஷின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக கொடுத்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் மு . க ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.