தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறி, அமமுக கட்சி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி வி தினகரன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. கடைசியான இந்த ஒடு ஆண்டு கால திமுக ஆட்சியிலாவது பெண்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் . திமுக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வேலியே பயிரை மேய்வது போல கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாலேயே மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் . திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, கொலை செய்யக்கூடிய அளவுக்கு கயவர்கள் பெருகியுள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல், கொலை , கனிமவள கொள்ளை என எதை எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். இல்லையெனில் திமுகவினரின் ஆதரவோடு இந்த குற்றங்கள் நடக்கின்றன.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரவுடிகள் ஓடி ஒளிந்தனர் கூலிப்படைகள் பதுங்கி இருந்தனர் ஆனால் இப்போது அவர்கள் திமுகவின் கொடியை கட்டிக் கொண்டு அலைகிறார்கள் . அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டபோது துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரைப் போன்று வேறு யாரும் புகார் அளித்து விடக்கூடாது என்பதற்காகவே அவருடைய முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டனர் . ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள், மருத்துவர்கள் , செவிலியர்கள் என ஏராளமானோர் திமுக ஆட்சிக்கு எதிராக வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் . இதையெல்லாம் திசை திருப்பவே இந்தியை திணிப்பதாக கூறி திமுகவினர் சாலையில் போராட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். தனியார் பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது . ஆனால் அரசு பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே உள்ளன. இதனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் . முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் நடத்தும் கல்விக்கூடங்களில் கூட ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது . அப்படியிருக்கையில், அரசு பள்ளிகளில் ஹிந்தி படிக்க தமிழக அரசு தடையாக உள்ளது. தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது .
ஜனநாயக கூட்டணியில் அதிமுக வந்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்து போகுமா? என கேள்வி கேட்ட போது, அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியின் தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார் . ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் இருந்து திமுகவை வீழ்த்த தயாராக இருக்கிறார்கள் . ஆனால் அதற்கு ஒரு சில தலைவர்கள் தடையாக இருக்கிறார்கள் . அதிமுக தொண்டர்கள் விழிப்படைந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இல்லையெனில் 2026 தேர்தலுக்குப் பிறகு இரட்டை இலை காணாமல் போய்விடும் . இப்போது அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் தலைமையில் இருந்த இரட்டை இலையின் பலம் இப்போது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். கடந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது . அதை, நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இப்போது அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் ஜெயலலிதாவாக ஆக முடியாது. எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றார்