தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு நெல்லை புனித. சவேரியார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை பா.விமலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய 'எண்ட ஆண்கள் ' என்ற ஆவணநூலை தமிழில் திறம்பட விமலா மொழிபெயர்த்துள்ளார். இதற்காக, இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியான 'எண்ட ஆண்கள்' என்ற நாவல் நளினி ஜமீலாவின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று நூலாகும். இந்திய சமூகத்தில் பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, அவர்களது போராட்டங்கள் போன்ற பல முக்கியமான அம்சங்களை இந்த நூல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
பா. விமலா, இந்த நூலை தனித்துவமான தமிழாக்கம் மூலம் விரிவாகவும், இலக்கிய நயத்துடனும் மொழிபெயர்த்துள்ளார். நூலின் உண்மையான உணர்வுகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் நேர்த்தியாக மொழிபெயத்துள்ளார். விமலாவுக்கு இந்த விருது திருநெல்வேலியின் கல்வி மற்றும் இலக்கிய மேம்பாட்டிற்கு கிடைத்த மற்றோரு அங்கீகாரம் என்றே சொல்லலாம்.
தனக்கு விருது கிடைத்தது குறித்து பேராசிரியை விமலா கூறியதாவது, 'கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த நான் எனது குடும்பத்தின் முதல் பட்டதாரி. என்னுடைய விதவைத் தாய், படிப்பின் மீது நான் கொண்ட ஆர்வத்தின் காரணமாக மிகுந்த இன்னல்களுக்கு இடையே என்னை படிக்க வைத்தார். என்னை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எனது மூத்த சகோதரி தனது படிப்பினை கைவிட்டார். முதுநிலை கல்விக்கு பிறகு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். கூடுதலாக ஒரு மொழியாக மலையாளத்தை தேர்வு செய்து நன்கு கற்று தேர்தேன். இதனால்தான் என்னால் மலையாளத்திலிருந்து
இந்த நாவலை தமிழில் சிறப்பாக மொழி பெயர்க்க முடிந்தது. உலக மகளிர் தினத்தில் இந்த விருது தேடி வந்தது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.