முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக நீர்நிலைப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

தமிழகத்தில் வனப்பகுதிகள் நீர்நிலைகள்,ஈரப்பதம் உடைய பகுதிகள், கடற்கரை பகுதிகளில் வசிக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் அன்றாட வாழ்விட நிலை, மாறி வரும் பருவ நிலையால் பறைவகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு ஆண்டுக்கு இரு முறை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக வனத்துறையினால் பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

,களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், மணிமுத்தாறு, முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச்சரக பகுதியிலுள்ள ஈரநிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகள் இன்று கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. பறவை கணக்கெடுப்பில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று காரையார், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகள் மற்றும் அம்பை அருகே பொட்டல் பகுதியிலுள்ள சீராங்குளம், சிங்கம்பட்டி குளம், பாபநாசம் கோரையன்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. சீராங்குளம் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளைய ராஜா தலைமையிலான வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் வாழும் 80 வகை பறவைகளில் மயில்,செம்பருந்து,கழுகு, மீன்கொத்தி,கொக்கு,சிவப்பு ஆள்காட்டி,பொறிஉள்ளான் உள்ளிட்ட 30 வகையான பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில பறவைகளின் கூண்டுகள், அதன் முட்டைகள் உள்ளிட்டவற்றையும் கணக்கீடு செய்யப்பட்டது.