பாளையங்கோட்டையிலுள்ள உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான் மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவன். இந்த மாணவன் தமிழ்நாடு ஐந்தாம் பட்டாலியன் என். சி . சி யில் இருக்கிறான். சாலமன் டேவிட்டிடம் தனி திறமை இருப்பதை அறிந்த பட்டாலியன் லெப்டினென்ட் கர்னல் கார்த்திகேயன் மற்றும் சக அதிகாரிகள் அவரது திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த ஊக்கத்தால் மாணவன் சாலமோன் டேவிட் தற்போது ஸ்மார்ட் ஷூ ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் அபாயகரமான பகுதிகளில் போரில் ஈடுபடும் போது கன்னிவெடிகளில் இருந்து தப்பிக்க இந்த ஷூ உதவிக்கரமாக இருக்கும்.
இந்த ஷூ அணிந்து ராணுவ வீரர்கள் நடக்கும் போது சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் இருக்கும் கன்னிவெடி இருந்தால் கூட அது குறித்து சிக்னல் கொடுத்து எச்சரிக்கும். சென்சார் கருவியுடன் இந்த ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவனின் இந்த கண்டுபிடிப்பு அசாத்தியமானது என்பதால் , தமிழ்நாடு சார்பாக டெல்லியில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சாலமோன் டேவிட் பங்கேற்றான். 55 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் சாலமன் டேவிட் கண்டுபிடிப்புக்கு முதலிடம் கிடைத்தது. தொடர்ந்து, இந்த ஷூவை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் காண்பித்து மாணவன் வாழ்த்து பெற்றான். பினினர், நெல்லை வந்த மாணவனை நெல்லை சரக டி ஐ ஜி மூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.