கழிவுநீர், கலங்கல் நீர் இப்போது பாம்பு : நெல்லை மாநகராட்சி குழாயில் வந்து விழுந்தது!

நெல்லை நகர மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறுக்குத்துறை, கொண்டாநகரம், அரியநாயகிபுரம், மணப்படை வீடு போன்ற இடங்களில் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து, அதன் மூலம் தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த தண்ணீரில் சாக்கடை கலப்பது, கலங்கலான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அவ்வப்போது பொது மக்கள் குற்றம் சாட்டுவது உண்டு. இதனால், தண்ணீரில் குளோரின் கலக்கப்படுகிறது.

இந்த நிலையில் , தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகர் மல்லிகை தெருவில் ஒருவரது வீட்டில் மாநகராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, தண்ணீர் பாம்பு ஒன்று தண்ணீர் கேனில் வந்து விழுந்தது. இதனால், வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தண்ணீர் பாம்பை ஒரு டப்பாவில் அடைத்து அப்புறப்படுத்தினார்கள்.

தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கல் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.