
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். கடந்த 18-ந்தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு இவர் , அருகேயுள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் ஜாகிர் உசேனுக்கும் தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் தௌபிக் என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை காரணமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி அவரின் மனைவி நூர்நிஷா , சகோதரர் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் அவர்களை காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாலையில் சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். டவுனில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்ட நேரம் குறித்து கொலையாளிகளுக்கு செல்போனில் துப்பு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து , அவனையும் கைது செய்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் போலீசார் கேட்டறிந்துள்ளனர். விரைவில், அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.