
திருநெல்வேலி டவுன் பகுதியில் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ள மாணவன் முருகேசன் எந்த ஆண்டில் எந்த தேதியை சொன்னாலும் அந்த நாளை துல்லியமாக கூறும் திறமையை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அந்த பள்ளியின் தாளாளர் மரிய சூசை நம்மிடம் கூறும்போது, மாணவன் முருகேசன் அற்புதமான தனித்திறமையை கொண்டிருப்பதாகவும், முந்தைய இனி வருகிற நாட்களின் தேதிகளை சொன்னால் நொடி பொழுதில் கிழமைகளை துல்லியமாக சொல்லிவிடும் ஆற்றல் பெற்றுள்ளான் என்று தெரிவித்தார்.
பின்னர், பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு தேதிகளை கூற கூற அந்த தேதிகளின் கிழமைகளை மிகத் துல்லியமாக கூறி அசத்தினார் மாணவர் முருகேசன்.
இதுகுறித்து மாணவர் முருகேசன் கூறும் போது, 'எனக்கு சிறுவயது முதலே கிழமைகளை கண்டுபிடிக்கும் ஆர்வம் இருந்தது. அந்த திறமையை வளர்த்துக் கொண்டேன். இந்த திறமை கடவுள் எனக்கு கொடுத்த பரிசு. தேதிகளை கேட்ட உடனேயே எனது மனதில் கிழமைகள் தெரிய வந்துவிடும்.
இதன் காரணமாக, கணித பாடங்களை என்னால் நன்றாக செய்ய முடிகிறது. இதற்காக, எந்த ஒரு பயிற்சியும் நான் மேற்கொள்ளவில்லை . இயல்பாகவே என்னால் கூற முடிகிறது' என்கிறார்.
இது போன்ற தனி திறமைகள் உள்ளோரை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமை.