இருட்டுக்கடை அல்வா வரதட்சணை கொடுமை வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்ப முயலும் மருமகன்

iruttukadai-halwa-dowry-harrasment-issue-the-son-in-law-tries-to-escape-abroad

வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் செல்ல முயலும் தனது கணவரை தடுக்கக்கோரி, இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீ கனிஷ்கா (26), தனது கணவர் பல்ராம் சிங் (27) என்பவர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையட்ததில் புகார் அளித்தார். போலீசார் பல்ராம் சிங்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மனைப் பெற்ற பல்ராம் சிங், தனது வழக்கறிஞர் மூலம் விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரியதோடு, எந்த தேதியில் ஆஜராவார் என்பதையும் குறிப்பிடவும் இல்லை.

இந்நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மனைவி ஸ்ரீ கனிஷ்கா புகார் அளித்துள்ளார்.
தனது மனுவில், ஸ்ரீ கனிஷ்கா கூறுகையில், "எனது கணவர் தற்போது லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும், கோயம்புத்தூரில் இருந்து வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிந்தேன். இது சட்ட மீறல் ஆகும். அவர் விசாரணையைத் தவிர்த்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. எனவே, எனது கணவர் பல்ராம் சிங் எந்தவொரு விமான நிலையத்திலும் (கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்டவை) விமானத்தில் ஏற முடியாதபடி பெயரில் லுக்அவுட் நோட்டீஸ் (Lookout Notice) பிறப்பிக்க வேண்டும். அவரை விசாரணைக்கு நேரில் ஆஜர்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . விசாரணை முடிவடையும் வரை அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக் கூடாது' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.