நெல்லை: விடைத்தாள் திருத்தும் பணி முடக்கம்: ஈட்டுப்படி ரூ. 200 மறுப்பால் ஆசிரியர்கள் போராட்டம்

nellai-answer-sheet-correction-work-suspended-teachers-protest

நெல்லை கேடிசி நகரில் உள்ள ரோஸ்மேரி பள்ளியில் நடைபெற்று வந்த பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று (ஏப்ரல் 23) ஆசிரியர்களின் திடீர் போராட்டத்தால் முடங்கியது.


கடந்த நான்காம் தேதி தொடங்கிய இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி சுமார் 20 நாட்கள் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநகரப் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளொன்றுக்கான ஈட்டுப்படியான 200 ரூபாய் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் அனைவரும் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இதனால், ரோஸ்மேரி பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி முடங்கியது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறுகையில், ' வெளியூரில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு ஈட்டுப்படி வழங்குகின்றனர். மாநகரப் பகுதியில் பணியாற்றும் தங்களுக்கு மறுப்பது நியாயமில்லை . இந்த பாரபட்சமான நடவடிக்கையை கண்டிக்கிறோம். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர்.

ஆசிரியர்களின் இந்த திடீர் போராட்டத்தால், திட்டமிட்டபடி விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைவதில் தாமதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்வு முடிவுகள் வெளியாவதிலும் காலதாமதம் ஏற்படலாம். கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலித்து சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.