ஒரு பணி 1000 விண்ணப்பங்கள் : நெல்லையில் அங்கன்வாடி பணிக்கு அலைமோதிய பெண்கள்!

one-job-1000-applications-women-flock-to-anganwadi-work-in-nellai

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,783 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஏப்ரல் 23) நிறைவடைகிறது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களும் அடங்கும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள குழந்தைகள் ஒருங்கிணைப்பு வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 22) விண்ணப்பம் அளிக்க ஏராளமான பெண்கள் குவிந்தனர்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள குழந்தைகள் மையங்களில் பணியாற்ற ஆர்வமுள்ள பெண்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தனர். பின்னர், தேவையான ஆவணங்களுடன் இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியும், 25 முதல் 35 வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதவைகள், ஆதரவற்ற மற்றும் பழங்குடியின பெண்களுக்கு வயது வரம்பு 40 ஆக உள்ளது. அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. விண்ணப்பதாரர்கள் அந்த மையம் அமைந்துள்ள கிராமம் அல்லது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாகும்.

விண்ணப்பம் அளிக்க இன்று கடைசி நாள் என்பதால், நேற்று பாளையங்கோட்டை குழந்தைகள் ஒருங்கிணைப்பு வளர்ச்சி அலுவலகம் கெண்களால் நிரம்பி வழிந்தது. கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். ஒரு வேலைவாய்ப்புக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெரிய வருகிறது.