
மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு விவகாரத்தில், தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், மாஞ்சோலையில் இன்னும் வசித்து வரும் 84 குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், மாஞ்சோலை தொழிலாளர்கள் தங்களது மறுவாழ்வுக்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனிடையே, அரசு அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேசுவது தொடர்பான பிரத்தியேக வீடியோ கிடைத்துள்ளது. மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் தாக்கல் செய்த மனு நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில், மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வுக்காக விரிவான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 247 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அதில் 190 பேருக்கு நிவாரண உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 534 குடும்பங்களில் 84 குடும்பங்கள் மட்டுமே இன்னமும் மாஞ்சோலையில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாஞ்சோலை பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளதால், அந்த 84 குடும்பங்களையும் அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துக்கான வாழ்வாதாரம், குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து அரசு இதுவரை தெளிவான தகவல்களை வழங்கவில்லை. 144 குடும்பங்களுக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் எங்கு செல்வார்கள்? இதற்கு, அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு விவகாரத்தில் தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதே நேரத்தில், மாஞ்சோலையில் வசித்து வரும் 84 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். எந்த தரப்பிற்கும் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து மாஞ்சோலையில் தற்போதுள்ள நிலவரம் குறித்து மனுதாரர்களின் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் கூறுகையில் , 'மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் இருந்து வெளியேற வேண்டுமானால் தற்போது அங்கு வசித்து வரும் குடும்பத்தினர்களுக்கு மாஞ்சோலை சமத்துவபுரம் என்ற பொதுவான இடத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும் . ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் , மாஞ்சோலையில் இருக்கும் தங்களது மூதாதையர்களின் கல்லறை மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை எந்த இடையூறும் இல்லாமல் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் . கூடுதலாக, சமவெளி பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கினால், மலையிலிருந்து கீழே சமவெளிக்கு இறங்கி வர தாங்கள் தயாராக உள்ளனர். நியாயமான மறுவாழ்வுக்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக செய்து தர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.