நெல்லையில் பைக் திருடனுக்கு நடந்த சம்பவம் : அன்னலட்சுமியின் அசத்தல் அடி

the-incident-that-happened-to-the-bike-thief-in-nellai

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. ரயில்வே குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னலட்சுமி என்பவரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றான்.தனது வாகனம் காணாமல் போனதை அறிந்த அன்னலட்சுமி சற்றும் தாமதிக்காமல் சுதாரித்துக்கொண்டார். அந்த திருடனை அவர் உடனடியாக பின் தொடர்ந்தார். விடாப்பிடியாக அவனை விரட்டிச் சென்று திருநெல்வேலி ரயில்வே நிலையப் பகுதியில் மடக்கிப் பிடித்தார்.

அன்னலட்சுமியின் துணிச்சலைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திரண்டனர். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவரும் விரைந்து வந்து உதவினார். பொதுமக்கள் மற்றும் காவலரின் உதவியுடன், திருடனிடமிருந்து தனது மோட்டார் சைக்கிளை பத்திரமாக மீட்டெடுத்தார் அன்னலட்சுமி. இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பெண் தனது பைக்கை துணிச்சலுடன் மீட்டதை பலரும் பாராட்டினர்.