பாளையங்கோட்டை : நள்ளிரவில் பெண்ணுடன் விடுதியில் தங்கிய இளைஞர் மர்மச் சாவு

palayamkottai-youngman-died-midnight-stayed-at-a-hostel-with-a-woman

பாளையங்கோட்டையில் நள்ளிரவு விடுதியில் அறை எடுத்து பெண்ணுடன் தங்கிய வாலிபர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை அருகேயுள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலை என்பவரின் மகன் ராமச்சந்திரன் (28). இவர் தற்போது பாளையம் செட்டிகுளம் அருகே உள்ள வீரப்பன் காலனியில் வசித்தார். இந்நிலையில் ,நேற்று நள்ளிரவு ராமசந்திரன் பெண் ஒருவருடன் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிரேயுள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு , சிகிச்சைக்கு வந்துள்ளதாக கூறி தங்குவதற்கு அறை எடுத்துள்ளனர். பின்னர், இருவரும் அறைக்கு சென்ற நிலையில் அந்தப் பெண் மட்டும் அறையில் இருந்து ஓடி வந்து லாட்ஜ் ஊழியர்களிடத்தில் ராமச்சந்திரன் மயங்கி விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் , விடுதி ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர்.அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் ராமச்சந்திரனை பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக ஹைகிரவுண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரன் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக அவருடன் வந்த பெண்ணை தேடினர். ஆனால் அவர் மாயமாகிவிட்டார். இதனால் அந்த பெண் யார்? எங்கு சென்றார் என்று தேடி வருகின்றனர். அவரை பிடித்து விசாரித்தால் மட்டுமே ராமச்சந்திரனின் சாவில் மர்மம் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்து தெரியவரும்.